சமூகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களில், முன்னதாக கிருமித்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 30 பேர்.
வழக்கமான கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொடர்பு இருந்ததாக மேலும் அறுவர் அடையாளம் காணப்பட்டனர்.
எஞ்சிய 14 பேருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்று இன்னும் அறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இதற்கிடையே, வெளிநாட்டிலிருந்து வந்த மூவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் இங்கு வந்தவுடன் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மொத்தம் 53 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின.
இத்துடன் சிங்கப்பூரில் மொத்தம் 66,172 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பீஷான் மற்றும் செங்காங் பேருந்து நிலையங்களில் பணியாற்றுவோர் உட்பட குறைந்தது 22 பேர் கொண்ட இரண்டு கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகியுள்ளன. பீஷான் பேருந்து நிலையம் தொடர்பில் குறைந்தது ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செங்காங் பேருந்து நிலையம் தொடர்பில் குறைந்தது 13 பேர் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் நேற்றைய நிலவரம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட மூன்று கிருமிக் குழுமங்களில் இவை இரண்டும் அடங்கும்.
அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையில் நேற்று முன்தின நிலவரப்படி பேருந்து நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் 16 பேர் என்று கூறப்பட்டது. இந்நிலையில், 97% பேருந்து ஓட்டுநர்களுக்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.
வழக்கமாக மேற்கொள்ளும் கண்காணிப்புப் பரிசோதனைப் பணிகளின்போது பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொவிட்-19 இருப்பது உறுதியானதாக நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும், இந்த 16 பேருக்கும் கடுமையான தொற்று அறிகுறிகள் இல்லை என்றும் கூறப்பட்டது. இரண்டு பேருந்து நிலையங்களிலும் சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அத்துடன் இரண்டு பேருந்து நிலையங்களிலும் பணியாற்றும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் ஆன்டிஜன் விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்றுக் குழுமம், தனிநபரைச் சார்ந்ததாக உருவாகியுள்ளது. அக்குழுமத்தில் நேற்று முன்தின நிலவரப்படி மூன்று கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டன. இதற்கிடையே, 54 சின் சுவீ ரோட்டில் அமைந்துள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் பள்ளியில் குறைந்தது 17 தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுவிட்டன.
'சாஃப்ரா தெம்பனிஸ்' கிருமிக் குழுமத்தில் குறைந்தது 15 சம்பவங்கள் உறுதியாகியுள்ளன.
தற்போது குறைந்தது 111 கிருமிக் குழுமங்கள் சிங்கப்பூரில் உள்ளன. அவற்றில் குறைந்தது மூன்று சம்பவங்களும் அதிகபட்சமாக 1,155 சம்பவங்களும் அடங்கும்.

