பொது இடங்களில் மக்களது உடல் வெப்பநிலையைச் சோதிப்பது வரும் வியாழக்கிழமைமுதல் நிறுத்தப்படஉள்ளதாக சுகாதார அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. அத்துடன் மேலும் அதிகமானோர் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டும் வருகின்றனர்.
இதனால், வெப்பநிலையைச் சோதிக்க அமர்த்தப்படும் பணியாளர்களுக்கான தேவை குறைந்துவரும் போக்கை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் உணர்ந்து வருகின்றன.
இருப்பினும், இப்பணியில் உள்ள சிலர், தங்களுக்குத் தொடர்ந்து வேலை இருக்கும் என்றும் தாங்கள் வேறு அம்சம் தொடர்பான பணிக்கு மாற்றப்படுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கொள்ளைநோய் கடந்த ஆண்டு ஏற்பட்டதுமுதல், பொது மற்றும் தனியார் பிரிவுகளில் உடல் வெப்பநிலையைச் சோதிப்பது போன்ற தற்காலிக வேலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்வது, தனிமை உத்தரவுக்கான செயல்பாடுகளில் ஈடுபடுவது, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது, நோயாளிகளுக்குச் சேவைகள் வழங்குவது போன்றவற்றிக்கு இப்பணியாளர்கள் உதவி வருகின்றனர்.
இத்தகைய பணிகளிலிருந்து மாற்றப்படுவோருக்குப் புதிய வேலைகளைத் தேடித் தர, வெவ்வேறு தொழில்துறைப் பங்காளிகளுடன் என்டியுசி வேலைப் பாதுகாப்பு மன்றம் இணைந்து பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது.
தேவை கருதி ஊழியர்கள் தங்களது வேலையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கும் வேறு வேலைக்கு அமர்த்தப்படுவதற்கும் இக்கட்டமைப்பு கைகொடுக்கும் என்றார் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு கில்பெர்ட் டான்.

