சிங்கப்பூரின் முதல் பாண்டா கரடி நேற்று பிறந்தது. ரிவர் சஃபாரியில் நேற்று காலை சுமார் 7.50 மணிக்கு காய் காய், ஜியா ஜியா பாண்டா கரடிகளுக்கு 200 கிராம் எடையுடைய அந்தக் குட்டி பிறந்தது.
தொடர்ந்து நடைபெற்றுவரும் தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு முத்தாய்ப்பாக பாண்டா குட்டியின் பிறப்பு உள்ளதாக ரிவர் சஃபாரியை நடத்தும் சிங்கப்பூர் வனவிலங்குகள் காப்பகம் அதன் அறிக்கையில் நேற்று குறிப்பிட்டது.
பாண்டா குட்டி ஆணா, பெண்ணா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் பின்னர் அது அறிவிக்கப்படும் என்றும் நேற்றைய அறிக்கை தெரிவித்திருந்தது. குட்டியும் அம்மா ஜியா ஜியாவும் தனியொரு இடத்தில் உள்ளன. அவற்றுக்கு இடையே பிணைப்பு ஏற்படவும் குட்டியை அதன் அன்னை பார்த்துக்கொள்ளவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காப்பகம் விளக்கியது.
ஜியா ஜியா, காய் காய் இரண்டும் 2015ஆம் ஆண்டுமுதல் இனப்பெருக்கம் செய்ய முயன்று வந்தன. ஏழாவது முறை வெற்றிகரமாக அமைந்துவிட்டது என்று சொல்வதே பொருந்தும். கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில், இனப்பெருக்கம் செய்வது ராட்சத பாண்டா கரடிகளுக்குச் சிரமமான ஒன்றே.
இந்நிலையில் 13 வயது காய் காய், 12 வயது ஜியா ஜியா இரண்டும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இனப்பெருக்கத்திற்குத் தயாராக உள்ளதன் அறிகுறிகள் தெரிந்ததாக காப்பகம் குறிப்பிட்டது.
ராட்சத பாண்டாவுக்கான சீன பாதுகாப்பு, ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் அறிவுறுத்தியபடி, காப்பகத்தின் விலங்கு மருத்துவர்கள் செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சையை மேற்கொண்டனர். பாண்டா கரடிகளின் கர்ப்ப காலம் மூன்று மாதங்கள் முதல் ஐந்து மாதங்களுக்கு மேல் போகலாம்.
சீனாவிலிருந்து காய் காய், ஜியா ஜியா செப்டம்பர் 2012ல் வரவழைக்கப்பட்டன. ரிவர் சஃபாரியின் முக்கிய அம்சங்கள் அவை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாண்டா குட்டி பிறந்தது குறித்து பிரதமர் லீ சியன் லூங்கும் குதூகலித்தார்.
"கூண்டில் உள்ள பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்வது கடினமான ஒன்று. இது காய் காய்க்கும் ஜியா ஜியாவுக்கும் ஏழாவது முயற்சி. அவற்றைப் பராமரிக்கும் பணியாளர்களுக்கு எனது பாராட்டுகள்," என்று திரு லீ ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார்.