தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் கொவிட்-19 தடுப்பூசிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பக்கவிளைவுகள் விகிதம் 0.12 விழுக்காடாக உள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து நான்காவது முறையாக தகவல் அளிக்கும் இந்த அறிக்கை, சிறப்பு அனுமதியின்கீழ் செலுத்தப்படும் சினோவேக்-கொரோனாவேக் தடுப்பூசியையும் இம்முறை உள்ளடக்கியது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இதுவரை மொத்தம் 7,567,466 அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றில், தடுப்பூசிகளுடன் தொடர்புடைய பக்கவிளைவு எனச் சந்தேகிக்கப்படும் 9,403 சம்பவங்கள் குறித்து ஆணையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி அவற்றில் 389 சம்பவங்கள், தடுப்பூசியுடன் தொடர்புடைய கடுமையான பக்கவிளைவுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளில் இது 0.005 விழுக்காடாகும்.
சினோவேக் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தடுப்பூசிகளுடன் தொடர்புடைய பக்கவிளைவு எனச் சந்தேகிக்கப்படும் 47 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் கடுமையான பக்கவிளைவுகள் எனக் கூறப்படும் நான்கு சம்பவங்களும் அடங்கும்.