முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு மாரடைப்பு ஏற்பட்ட 16 வயது பதின்ம வயது இளையரின் உடல்நிலை சீராகிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'விஐஎஃப்ஏபி' எனப்படும் தடுப்பூசி அபாய நிதியுதவித் திட்டத்தின்கீழ் அவருக்கு 225,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளையர் தற்போது உள்நோயாளி சிகிச்சை பெற்று வருகிறார். அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு உதவி தேவைப்படவில்லை எனச் சுகாதார அமைச்சு கூறியது.
வரும் வாரங்களில் இளையர் விடுவிக்கப்படலாம். ஆனால் அதற்குப் பிறகும் அவருக்கு வெளிநோயாளி சிகிச்சை தேவைப்படக்கூடும். அதன் பின்னர்தான் அவரால் மீண்டும் பள்ளிக்குச் செல்லவும் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடியும் எனச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.சிறுவனைக் கவனித்துவரும் மருத்துவக் குழு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதோடு அவரின் உடல்நிலையைக் கண்காணிக்கும்.
சென்ற மாதம் மூன்றாம் தேதியன்று இளையருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
அதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு அவர் முதல் கொவிட்-19 தடுப்பூசிபைப் போட்டுக்கொண்டார்.
தடுப்பூசியால் வந்த பக்கவிளைவால் அவருடைய இதயத்தின் தசை வீங்கியது.
அதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அமைச்சு சொன்னது.
அதிக எடையைத் தூக்கி அவர் செய்த உடற்பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.
'எம்ஆர்என்ஏ' ரக தடுப்பூசியை முதல் முறையாகப் போட்டுக்கொண்ட பிறகு இதயத் தசையில் வீக்கம் ஏற்பட்டோர் அதற்குப் பிறகு அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக்கூடாது.

