பாலர் பள்ளிகளில் புதிதாக சேரும் சிறுவர்களின் பெற்றோர் நாளை மறுதினம் முதல் அவற்றுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் அவர்கள் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு பெற்றோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
அந்தப் பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் அல்லது 'ஏஆர்டி' சோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.
சில துறைகளில் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும் அல்லது ஒரு வாரத்திற்கு இரண்டு முறை சோதனை மேற்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பாலர்பள்ளிகளிலும் இது செயல்படுத்தப்படும். அக்டோபர் மாதம் முதல் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பாலர்பள்ளி ஊழியர்கள் வாரத்திற்கு இரண்டு முறை கட்டாயமாக 'ஏஆர்டி' சோதனையை மேற்கொள்ளவேண்டும்.
மருத்துவக் காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத பாலர் பள்ளி ஊழியர்களுக்குச் சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் சலுகைகள் வழங்கும்.
பெரும்பாலான பாலர்பள்ளி ஊழியர்கள் ஒரு முறையாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.
பாலர்பள்ளிகள் தொடர்ந்து விழிப்புடன் நடந்துகொண்டு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றும் என்று அது கூறியது.
பாலர்பள்ளிகளுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.

