கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை தொடர்ந்து குறைந்து வந்த புதிய தனியார் வீடுகளின் விற்பனை, ஜூலை மாதத்தில் 82.2% உயர்ந்துள்ளது. தனியார் வீட்டு விற் பனையில் இவ்வாண்டு ஏற்பட்டுள்ள இரண்டாவது பெரிய உயர்வு இதுவாகும்.
ஜூலை மாதத்தில் எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைச் சேர்க்காமல் 1,589 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டதாக நகர சீரமைப்பு வாரியம் நேற்று கூறியது. ஒப்புநோக்க ஜூன் மாதத்தில் 872 தனியார் வீடுகள் விற்கப்பட்டன.
சென்ற ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது தனியார் வீட்டு விலை 46.7% அதிகரித்தது.
கடந்த ஜூலை 22ஆம் தேதி, கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டபோது வீடுகளை நேரில் சென்று பார்ப்பதும் விற்பனைக் கூடங்களில் வருகையாளர் எண்ணிக்கையும் பெரிதும் குறைந்து போயின.
கடும் கட்டுப்பாடுகள், வீடு களுக்கான தேவையைப் பெரிதும் குறைக்கவில்லை என்று ஆரஞ்சு அண்ட் தியே சொத்து முகவை நிறுவனத்தின் ஆய்வுப் பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டீனா சன் கூறினார்.
கடந்த மாதம் பல தனியார் வீட்டுத் திட்டங்களில் விற்பனை அதிகமானதாகவும் தங்களால் வாங்க முடியாத அளவுக்கு வீட்டு விலை மேலும் ஏறக்கூடும் என்ற அச்சத்தில் சிலர் அவசரமாக வாங்கியதாகவும் திருவாட்டி சன் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இவ்வாண்டு ஆக அதிகமாக 1,633 தனியார் வீடுகள் விற்பனையாயின. ஆனால் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் விற்பனை குறைந்தது.
அண்மையில் அங் மோ கியோ அவன்யூ 1, லெண்டோர் சென்ட்ரல் ஆகியவற்றில் அரசாங்க நிலம் ஏலக் குத்தகையில் பெரிய விலைக்கு விற்கப்பட்டது.
இது தனியார் வீட்டு விற்பனை கடந்த மாதம் பெரிதும் கூடியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று புரோப்நெக்ஸ் சொத்து நிறு வனத்தின் தலைமை நிர்வாகி இஸ்மாயில் கஃபூர் கூறினார்.
புறநகர் பகுதிகளில்தான் ஆக அதிக விற்பனை நடைபெற்றது என்றார் திருவாட்டி சன். பாசிர் ரிஸ் 8, நோர்மெண்டன் பார்க், மிட்வுட், செங்காங் கிராண்ட் ரெசிடன்சஸ், கி ரெசிடன்சஸ் போன்ற திட்டங்களில் பல வீடுகள் விற்கப்பட்டதை அவர் சுட்டினார்.
ஜூலையில் விற்கப்பட்ட வீடுகளில் கிட்டத்தட்ட பாதி, $1.5 மில்லியனுக்குக் குறைவாக விற்கப்பட்டன.
ஜூலை மாத விற்பனை ஏற்றத்தைப் பயன்படுத்தி, இந்த மாதமும் தனியார் வீட்டு விற்பனையை உயர்த்த தனியார் வீட்டு நிறுவனங்கள் முயலும் என்று ஹட்டன்ஸ் ஆசியா சொத்துச் சந்தை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் சீனர்களின் ஆவிகள் பசியாறும் மாதம் என்பதால் வழக்கமாக அந்நேரத்தில் வீடுகள் பெரிதும் கைமாறாது.

