வெளிநோயாளி புற்றுநோய் சிகிச்சை: 2023 ஏப்ரல் முதல் குறிப்பிட்ட மருந்துகளுக்கு மட்டுமே காப்புறுதிப் பாதுகாப்பு கோர முடியும்
தனியார் காப்புறுதி நிறுவனங்களிடம் இருந்து ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களை வாங்கியிருப்போர், 2023 ஏப்ரல் முதல் வெளிநோயாளி புற்றுநோய்ச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில மருந்துகளுக்குக் காப்புறுதிக் கோரிக்கை விடுக்க இயலாமல் போகலாம்.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் இருந்து மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தின்கீழ் வரும் மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட, சிக்கனமான புற்றுநோய் மருந்துச் சிகிச்சைகளைச் சுகாதார அமைச்சு பட்டியலிட்டுள்ளது.
2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து விற்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் அனைத்து ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களுக்கும் அப் பட்டியல் பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்போதைக்கு, வசூலிக்கப்படும் கட்டணத்தின் அடிப்படையில் வெளிநோயாளி புற்றுநோய் சிகிச்சைகளையும் பல ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்கள் உள்ளடக்குகின்றன. அதாவது, காப்புறுதித் திட்டத்தின் ஒட்டுமொத்த ஆண்டு வரம்பு அடிப்படையில் சிகிச்சைக் கட்டணத்திற்கான அதிகபட்ச கோரிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.
புதிய மாற்றத்தின்படி, சுகாதார அமைச்சு அங்கீகரித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கிட்டத்தட்ட 150 மருந்துகளுக்கு மட்டுமே காப்புறுதி கோர முடியும். அப்பட்டியலில் இடம்பெறா மருந்துகளுக்குக் காப்புறுதி கோர முடியாது.
வெளிநோயாளி புற்றுநோய் சிகிச்சைக்கான காப்புறுதி கோரிக்கைக்கும் வரம்பு நிர்ணயிக்கப்படும். அது பயன்படுத்தப்படும் மருந்தைப் பொறுத்து அமையும்.
"ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்ட வழங்குநர்கள், புதிய மாற்றங்களைப் படித்து, சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு இணங்க தங்களது காப்புறுதித் திட்டங்களை முறைப்படுத்துவர்," என்று சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், புதிய விதிமுறை துணைக் காப்புறுதிகளுக்கு (ரைடர்) பொருந்தாது. ஒருங்கிணைந்த காப்புறுதிகளுக்கான சந்தா மெடிசேவ் மூலம் செலுத்தப்படும்.
அதாவது, துணைக் காப்புறுதிகள் வாங்கியுள்ள 1.7 மில்லியனுக்கும் மேற்பட்டோர்க்கான சிகிச்சைச் செலவை முழுமையாக ஏற்பதை எட்டுக் காப்புறுதி நிறுவனங்கள் தொடர முடியும்.
ஒருங்கிணைந்த காப்புறுதி வாங்கியுள்ள நோயாளிகள், தங்களது சிகிச்சைக்கான செலவில் ஆண்டிற்கு $3,500 வரையும் மீதத் தொகையில் பத்து விழுக்காட்டையும் கையில் இருந்து செலுத்த வேண்டும். எஞ்சிய தொகையைக் காப்புறுதி மூலம் பெறலாம்.
2018ஆம் ஆண்டிற்குமுன், நோயாளியின் சிகிச்சைக்கான முழுக் கட்டணத்தையும் துணைக் காப்புறுதி மூலம் செலுத்த முடிந்தது. ஆயினும், 2018 மார்ச் 8ஆம் தேதிக்குப்பின் துணைக் காப்புறுதி வாங்கியோர், சிகிச்சைக்கான கட்டணத்தில் ஐந்து விழுக்காட்டைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக துணைக் காப்புறுதிகளில் சுகாதார அமைச்சு மாற்றம் செய்தது. துணைக் காப்புறுதிகள் மூலம் முழுத் தொகையையும் செலுத்தியோர்க்கான சிகிச்சைக் கட்டணம், துணைக் காப்புறுதி பெறாத மற்ற நோயாளிகளின் கட்டணத்தைக் காட்டிலும் 60% கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
55 புற்றுநோய் மருந்துகளுக்கு மானியம்
சிங்கப்பூரில் மானியம் பெறும் மருந்துகளுக்கான பட்டியலில் மேலும் 55 புற்றுநோய் மருந்துகள் சேர்க்கப்படவுள்ளன.
அடிப்படை மருந்துப் பட்டியல், மருத்துவ உதவி நிதி (எம்ஏஎஃப்) பட்டியலில் அவை சேர்க்கப்பட இருப்பதன்மூலம் 150 புற்றுநோய்ச் சிகிச்சைகளுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
எம்ஏஎஃப் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறுவதற்கான தகுதிவிதிகள் அடுத்த ஆண்டு செப்டம்பரில் இருந்து விரிவுபடுத்தப்படும்.
இதனையடுத்து, குடும்பத்தில் மாதாந்திர தனிநபர் சராசரி வருமானமாக $6,500 வரை ஈட்டும் சிங்கப்பூரர்கள், புற்றுநோய்க்கும் மற்ற நோய்களுக்கும் மருந்து மானியம் பெறத் தகுதிபெறுவர்.
இப்போது அந்த வருமான வரம்பு $2,800ஆக இருக்கிறது.
மெடிஷீல்டு லைஃப் கோரிக்கை வரம்புகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, புற்றுநோய் மருந்துகளுக்காக மெடிசேவ் கணக்கில் இருந்து எடுக்கக்கூடிய தொகையின் வரம்பும் மாற்றியமைக்கப்படும் என்றும் அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இப்போதைக்கு, அனைத்துப் புற்றுநோய் மருந்துச் சிகிச்சைகளுக்கும் இரத்தப் பரிசோதனை போன்ற அது சார்ந்த சேவைகளுக்கும் ஒருவர் மாதத்திற்கு $1,200 வரை எடுக்க இயலும். இந்நிலையில், இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டு நடப்பிற்கு வந்தபின், பயன்படுத்தும் மருந்தைப் பொறுத்து, சிலருக்கு அந்த வரம்பு $600ஆகக் குறையும்.

