ஆங்கில மொழியை எழுதுவதில் மாணவர்களுக்கு உதவும் விதமாக செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் மதிப்பீட்டு முறை இன்னும் ஈராண்டுகளில் பள்ளிகளில் நடப்பிற்கு வரும்.
ஆங்கில இலக்கணம், வாக்கிய அமைப்பு, சொல்திறம் ஆகியவற்றைச் சரிசெய்ய உதவும் தானியக்க மதிப்பீட்டு முறையைக் கல்வி அமைச்சு உருவாக்கி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.
தொடக்கப்பள்ளி உயர்வகுப்பு மாணவர்களையும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களையும் இலக்காகக் கொண்டு புதிய மதிப்பீட்டு முறை உருவாக்கப்படுகிறது. மாணவர் கற்றல் தளத்துடன் (எஸ்எல்எஸ்) அது ஒருங்கிணைக்கப்படும்.
ஆங்கில மொழியை எழுதுவது தொடர்பில் விரைவான, தனிப்பயன் சார்ந்த, செயல்படுத்தத்தக்க கருத்துகளைப் புதிய முறை வழங்கும் என்று அமைச்சு தெரிவித்தது.
வரும் 2023ஆம் ஆண்டுவாக்கில் இம்முறை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு கூறியது. மாணவர்களின் மின்னிலக்க அறிவாற்றலை வலுப்படுத்தும் நோக்கில் 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய மின்னிலக்கக் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முறை இடம்பெறும்.
"முதற்கட்டமாக ஆங்கில மொழியை எழுதுவதில் இத்திட்டம் கவனம் செலுத்தும். பின்னர் மற்ற பாடங்களுக்கும் இதுபோன்ற முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்துக் கல்வி அமைச்சு பரிசீலிக்கும்," என்றார் கல்வி அமைச்சின் கல்வியியல் தொழில்நுட்பப் பிரிவின் வட்டார இயக்குநர் ஏரன் லோ.
"ஆங்கில மொழியை எழுதுதல் தொடர்பான சில அம்சங்களில் கருத்துரைக்கும் செயல்முறையைத் தானியக்கப்படுத்துவது, அடிக்கடி எழுதிப் பழக மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும். தங்கள் ஆசிரியர்களிடம் இருந்து விரிவான மதிப்பீட்டைப் பெறுவதற்குமுன், தாங்கள் எழுதியதைத் திருத்தி, மேம்படுத்த தானியக்க மதிப்பீட்டு முறையை மாணவர்கள் பயன்படுத்தலாம்," என்று திரு லோ சொன்னார்.
அடிப்படை மொழிப் பிழைகளைத் திருத்தும் நேரம் மிச்சமாவதால், சொல்வன்மை, சொல்நயம் போன்ற உயர்திறன்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.