இம்மாதம் 26ஆம் தேதி முதல், 131 பேரங்காடிகளில் இருந்து ஒவ்வொரு குடும்பமும் 50 மருத்துவத் தர அறுவை சிகிச்சை முகக்கவசங்களையும் 25 என்95 முகக்கவசங்களையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
தெமாசெக் அறநிறுவனத்தின் ஐந்தாவது முகக்கவச விநியோக நடவடிக்கை இது.
இலவச முகக்கவச விநியோகம் குறித்து தெமாசெக் தலைமை நிர்வாகி திருவாட்டி ஹோ சிங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக அறிவித்தார். செப்டம்பர் 26ஆம் தேதிவரை இலவச முகக்கவச விநியோக நடவடிக்கை இடம்பெறும்.
இலவச முகக்கவச விநியோகம் தொடர்பில் பெரிய அளவிலான பேரங்காடிகளுடனும் குறிப்பிட்ட சில கேப்பிட்டலேண்ட் கடைத்தொகுதிகளுடனும் தெமாசெக் அறநிறுவனம் இணைந்து பணி ஆற்றி வருகிறது.
ஷெங் சியோங், ஃபேர்பிரைஸ், கோல்டு ஸ்டோரேஜ், பிரைம், ஜயன்ட் போன்ற பேரங்காடிக் குழுமங்கள் அவற்றில் அடங்கும்.
முகக்கவசங்களைப் பெற, குடியிருப்பாளர்கள் தங்களது எஸ்பி குழும மின்கட்டண ரசீதை எடுத்துச் செல்ல வேண்டும். அது, தாள் அல்லது மின்னணு ரசீதாக இருக்கலாம்.
இந்த விநியோக நடவடிக்கையில் மருந்தகங்கள் இடம்பெறா என்று திருவாட்டி ஹோ சிங் தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான முகக்கவசங்கள் வழங்கப்படுவதால், அவற்றை இருப்பில் வைக்கும் அளவிற்கு மருந்தகங்களில் இடமிராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அதிகமான இடம் தேவைப்படுவதால் இந்த விநியோக நடவடிக்கையில் எல்லாப் பேரங்காடிகளும் பங்கேற்காது," என்றார் அவர்.
பிளாஸ்டிக் கழிவைக் குறைக்கும் விதமாக, இலவச முகக்கவசங்களைப் பெற சொந்தமாக பையை எடுத்துச் செல்ல குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அத்துடன், கையிருப்பு மிகுதியாக இருப்பதால் இலவச முகக்கவச விநியோக நடவடிக்கையின் முதல் மூன்று நாள்களிலேயே அவற்றைப் பெறும் வகையில் பொதுமக்கள் விரைய வேண்டாம் என்று திருவாட்டி ஹோ சிங் தமது ஃபேஸ்புக் பதிவின் வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

