முகக்கவசம் அணிய மறுத்த
பிரிட்டிஷ்காரருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
40 வயது பெஞ்சமன் கிளினுக்கு மனநலப் பிரச்சினை ஏதும் இல்லை என்றும் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 7ஆம் தேதியன்று முகக்கவசம் அணியாமல் எம்ஆர்டி ரயிலில் கிளின் பயணம் செய்தது காணொளியில் பதிவானது.
இரண்டு நாட்கள் கழித்து அவரைக் கைது செய்ய சென்ற போலிசாரிடம் அவர் முரண்டுபிடித்ததாகவும் கொவிட்-19 உண்மையல்ல என்று அது வெறும் கட்டுக்கதை என்று கிளின் கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமது நண்பர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு
மதிக்கப்பட்டதாக கிளின் கூறியதாக போலிஸ் ஆய்வாளர் சீ சியூ குவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். கொவிட்-19 தடுப்பூசி உடல்
நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று கிளின் கூறியதாக ஆய்வாளர் தெரிவித்தார். தாம் சட்டத்துக்கு உட்பட்டவர் அல்ல என்றும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் செல்லாது என்றும் கிளின் தெரிவித்திருந்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த $5,000 பிணை கடந்த மாதம் 19ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதிலிருந்து கிளின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொவிட்-19 தற்காலிக நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கினார். அத்துடன், தொல்லை விளைவித்தது தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்கினார்.
கடந்த மே மாதம் 7ஆம் தேதி காலை 11.06 மணிக்கும் 11.31 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையத்திலிருந்து ஹாலந்து வில்லேஜ் நிலைத்துக்கும் எம்ஆர்டி ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கிளின் முகக்கவசம் அணியவில்லை.
"நான் முகக்கவசம் அணியவேமாட்டேன்," என்று பயணத்தின்போது தெரிவித்து அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர் தொல்லை விளைவித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் 9ஆம் தேதியன்று ஹாலந்து சாலையில் உள்ள ஆல்ஸ்வொர்த் பார்க் கொண்டோமினியத்தின் தரைத்தளத்தில் பிற்
பகல் 12.30 மணி அளவில் ஆய்வாளர் சீயிடமும் உதவி கண்காணிப்பாளர் அல்வின் குவேக் சின் ஹானிடமும் கிளின் மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்
படுகிறது. நேற்று அவர் குற்றவாளிக் கூண்டில் இருந்தபோது தமது குடும்பத்தாரிடமிருந்து ஏதாவது தகவல் கிடைத்ததா என்று அரசாங்க வழக்கறிஞர் திமத்தியஸ் கோவிடம் கிளின் கேட்டார்.
"இறந்த எனது பாட்டி அவரது கல்லறையிலிருந்து உங்களுடன் தொடர்புகொண்டிருக்கக்கூடும்," என்று கிளின் தெரிவித்தார்.
வழக்கு விசாரணையின்போது
நீதிமன்றத்தை அவமதித்த பெண்
வழக்கு விசாரணை தொடங்கி கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு வழக்கு விசாரணையைக் காண வந்திருந்தோர் அமர்ந்திருக்கும் இருக்கையில் இருந்த பெண் ஒருவர் முகக்கவசம் இல்லாமல் உட்கார்ந்துகொண்டிருந்தார்.
அவரை அதிகாரிகள் அணுகியபோது, தமது முகக்கவசம் அறுந்து விட்டதாக அப்பெண் கூறினார். தாம் உயிருள்ள பெண் என்றும் தம்மிடம் பேச அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். சட்டத்துக்கு உட்பட்டவர் அல்ல என்று கிளின் தெரிவித்திருந்தது போலவே அவரது கருத்துகள் அமைந்தன.
நீதிமன்றத்தைவிட்டு வெளியேறும்படி நீதிபதி அவருக்கு உத்தரவிட்டபோது அப்பெண் வெளியேற மறுத்தார். அது ஒரு நீதியற்ற நீதிமன்றம் என்றும் அப்பெண் கூறினார். அவரை வெளியே அழைத்துச் செல்ல போலிசார் முயன்றபோது, "நீதிபதி மீது எனக்கு துளியளவும் மரியாதை இல்லை," என்று அப்பெண் கத்தினார்.
அவரை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றும்படி போலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். அதிகாரிகள் பலர் அப்பெண்ணை வெளியே அழைத்து சென்றதும் வழக்கு விசாரணை தொடர்ந்தது. முகக்கவசம் அணிவது தேவையற்றது என்று அப்பெண் நீதிமன்றத்துக்கு வெளியே தெரிவித்தார். நீதிமன்றத்துக்குள் மீண்டும் செல்ல அவருக்கு அனுமதி இல்லை என்று போலிசார் தெரிவித்ததும் அதை எதிர்த்து அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"நான் ஏன் மீண்டும் உள்ளே செல்லக்கூடாது? நீதிபதிக்கு என் மீது பயமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். ஏறத்தாழ 15 நிமிடங்கள் கழித்து, அவர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல முற்பட்டபோது அதிகாரிகள் அவரைத் தடுத்தனர். தாம் ஒரு சிங்கப்பூரர் என்று தெரிவித்த அப்பெண், தமது அடையாள எண்ணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அப்பெண் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு நீதிமன்றத்தில் உள்ள தடுப்புக் காவல் அறையில் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

