ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் திட்டத்தை ஏமாற்றி $40 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பறித்த கும்பலைச் சேர்ந்த மேலும் ஒரு முக்கிய நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
41 வயது ஆண்டி குவெக் சீ லெங்கிற்கு 11 ஆண்டுகள், ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட 21
குற்றச்சாட்டுகளை முன்னாள் கிராப், ஊபர் ஓட்டுநரான குவெக் ஒப்புக்கொண்டார். அவற்றில் மோசடி குற்றச்சாட்டுகளும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
அவருக்கு எதிராக மேலும் 49 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
அக்கும்பல் ஒன்பது போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் நிதி கேட்டு விண்ணப்பம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்டுள்ள பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெற ஊழியர்களை அனுப்பிவைக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் திட்டத்தின்கீழ் நிதி பெற விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி, ஊழியர்களின் பயிற்சிகளுக்காக ஏற்படும் செலவில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்கும். விண்ணப்பம் செய்யப்படும் முறையைப் பொறுத்து, பயிற்சி அளிப்பவர்கள் அல்லது முத
லாளிகளுக்கு மானியத் தொகை அனுப்பிவைக்கப்படும்.
2017ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் போலி நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 8,381 பயிற்சிக் கட்டண மானிய விண்ணப்பங்களும் 8,391 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் குவெக் அந்த கும்பலில் இணைந்தார்.
அக்கும்பலைச் சேர்ந்த மற்றொருவரான 45 வயது சிம் சூன் லீயிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பயிற்சி வழங்குவதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களின் இயக்குநராக குவெக் பதிவு செய்துகொள்ள இணக்கம் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட $19 மில்லியனுக்கும் அதிகமான தொகையை கணக்கில் காட்ட கும்பலுக்கு குவெக் உதவினார்.
சிம்மிடமிருந்து தரகுப் பணமாக குவெக் $1 மில்லியனுக்கும் அதிகமாகப் பெற்றார்.
2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதியன்று சிம்முடன் அவர் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் போலிசார் தம்மைத் தேடுவதாக தமது சகோதரரான ரோஜர் குவெக் சி குவாங் மூலம் குவெக் தெரிந்துகொண்டார்.
இருப்பினும், சிங்கப்பூருக்குத் திரும்பாமல் சீனாவிலேயே இருக்க அவர் முடிவெடுத்தார்.
ஹாங்காங்கில் தமது சிங்கப்பூர் கடப்பிதழைப் புதுப்பிக்கத் தவறியதை அடுத்து, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று குவெக் அங்கிருந்து சிங்கப்பூர் அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டார்.
அதே நாளன்று அவர் வர்த்தக விவகாரத் துறையால் கைது செய்யப்பட்டார்.
குவெக்கின் சிறைத் தண்டனை 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியிலிருந்து அவரது சிறைத் தண்டனை தொடங்குவதாக எடுத்துக்
கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக ரோஜர் குவெக்கிற்கு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் மேலும் இருவருக்கு இவ்வாரம் தண்டனை விதிக்கப்பட்டது.

