ஒரு மாதத்திற்குப் பின் உள்ளூரில் குறைவான தொற்று எண்ணிக்கை
சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி 29 உள்ளூர்வாசி
களுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு ஆகக் குறைந்த எண்ணிக்கையில் நேற்று தொற்று பதிவானது. ஜூலை 13ஆம் தேதி உள்ளூரில் 19 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதற்குப் பிறகு நேற்றைய எண்ணிக்கை அதற்கு அடுத்த நிலையில் உள்ளது.
புதிதாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 29 பேரில் 13 பேருக்கு இதற்கு முன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என சுகாதார அமைச்சு கூறியது. அதேநேரம் 11 பேருக்கு இதற்கு முந்திய நோயாளி
களுடனும் தனிமை உத்தரவில் இருந்தவர்களுடனும் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதாகவும் அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூரோங் வெஸ்ட்: பரிசோதனை முடிவில் ஆறு பேருக்கு தொற்று
ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 1, புளோக் 695ல் மேற்கொள்ளப் பட்ட கொவிட்-19 பரிசோதனையின்போது ஆறு பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்ததாக சுகாதார அமைச்சு புதன்கிழமை தெரிவித்தது. அதே நேரம் இந்த புளோக்கில் உள்ள 480 குடியிருப்பாளர்களுக்குத் தொற்று இல்லை என்றும் பரிசோதனை முடிவுகள் காட்டின. இந்த புளோக்கில் நடைபெற்று வந்த கட்டாய கிருமித்தொற்று
பரிசோதனை செவ்வாய்க்கிழமை முடிவு பெற்றதைத் தொடர்ந்து அமைச்சு அது தொடர்பான விவரங்களை வெளியிட்டது. இந்த புளோக்கில் உள்ள ஆறு வீடுகளைச் சேர்ந்த 14 பேருக்குத் தொற்று பரவியதைத் தொடர்ந்து இந்தப்
பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மற்ற இரு தொற்றுக் குழுமங்களான சின் சுவீ ரோடு புளோக்குகள் 52, 53 மற்றும் ஜாலான் குக்கோ புளோக்குகள் 3 மற்றும் 9 ஆகியவற்றில் நடத்தப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை தெரிய வந்ததாகவும் அமைச்சு கூறியுள்ளது.
சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாதோருக்கும் தடுப்பூசி
சிங்கப்பூரில் தங்கும் காலம் நீட்டிக்கப்பட்ட குறுகியகால அட்டைதாரர்கள் நாட்டின் தடுப்பூசித் திட்டத்தின்கீழ் கொவிட்-19 தடுப்பூசியை ஆகஸ்ட் 18 முதல் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இதற்குக் குறுகியகால அனுமதி அட்டை, ஸ்பெஷல் பாஸ் எனப்படும் சிறப்பு வேலை அனுமதி அட்டை, பயிற்சிக்கான எம்பிளாய்மண்ட் பாஸ், பயிற்சிக்கான வேலை அனுமதி அட்டை மற்றும் வேலை விடுமுறை அட்டை போன்றவற்றை வைத்திருப்போர் இலவசத் தடுப்பூசிக்குத் தகுதிபெறுவர். மேலும், குறைந்தபட்சம் 60 நாட்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருக்கும் குறுகியகால வருகை அட்டை வைத்திருப்போரும் இதற்குத் தகுதியுள்ளவராகக் கருதப்படுவர். கொள்ளைநோய் பரவலுக்கு இடையே உலகப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்ப இயலாதவர்கள் இவர்கள். தற்காலிகமாகத் தங்கி இருக்கக்கூடியவர்கள் என்றபோதிலும் இவர்களுக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் கிருமிப் பரவலுக்கு எதிரான நாட்டின் மீள்திறனை வலுப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்ச நேற்று முன்தினம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
"அத்துடன், இத்தகையோரில் பெரும்பாலானோர் அடிக்கடி பொதுமக்களுடன் கலக்கிறார்கள். தடுப்பூசி போடாதவரை முறையான தொற்றுப் பரிசோதனைக்கு அவர்கள் செல்ல வேண்டி உள்ளது," என்றது அமைச்சு. குறுகிய கால வேலை அனுமதி மற்றும் சிறப்பு வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர் பலதுறை மருந்தகங்களைத் தவிர்த்து இதர தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அதேநேரம் குறுகியகால வருகை அட்டை வைத்திருப்போர் குறுந்தகவ லின் அடிப்படையில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

