ஜூரோங் தீவில் பயன்படுத்தப்படும் வளங்களைக் குறைத்து அதை நீடித்த நிலைத்தன்மையான எரிசக்தி, ரசாயனப் பூங்காவாக மாற்றுவதற்கான இரண்டு ஆண்டுகால ஆய்வு அண்மையில் நிறைவுபெற்றது.
ஜேடிசி நிறுவனம் வழிநடத்திய ஜூரோங் தீவு சுழல் பொருளியல் ஆய்வில் தீவில் செயல்படும் 51 நிறுவனங்கள் பயன்படுத்தும் எரிசக்தி, தண்ணீர், அவை வெளியேற்றும் ரசாயனக் கழிவு ஆகியவை குறித்த தரவுகள் ஆராயப்பட்டன.
கட்டமைப்பு அளவில் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்கக் கூடிய ஒருங்கிணைப்புத் திட்டங்களை அடையாளம் காண்பது அதன் நோக்கம். சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030இன் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
தற்போதைய சவால்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வு களைக் காண வேண்டும் என்று ஜேடிசி கேட்டுக்கொண்டது.
அதற்கு நிறுவனங்கள் பல்வேறு தரப்புகளிடமிருந்து யோசனைகளைப் பெறுவதோடு, ஜூரோங் தீவில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி பரிசோதிக்க வேண்டும் என்று ஜேடிசி கூறியது.
இரண்டு ஆண்டு ஆய்வின் நிறைவைக் குறிக்க இணையம் வழி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், சிங்கப்பூர் பருவநிலை நிலைத்தன்மை தொடர்பான அதன் கடப்பாடுகளை நிறைவேற்றும் முயற்சிகளில் ஜூரோங் தீவு நடுநாயகமாக இருப்பதாகக் கூறினார்.
உலகின் முக்கிய எரிசக்தி, ரசாயன மையங்களில் ஒன்றான ஜூரோங் தீவில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள பல நிறுவனங்களின் தொழிற்சாலைகள் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒருங்கிணைந்த கட்டமைப்பபையும் மின்சக்தி, நீர்வசதியையும் பெறுகின்றன.
கடந்தாண்டு அத்தீவில் 8.1 மெகவாட்-பீக் அளவு சூரிய எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டது. மேலும், 6.5 மில்லியன் கன மீட்டர் அளவு நன்னீர் மறுசுழற்சி செய்யப்பட்டதுடன் கடல்நீரைப் பயன்படுத்தியதால் 58.8 மில்லியன் கன மீட்டர் நன்னீர் சேமிக்கப்பட்டது என்று டாக்டர் டான் கூறினார். இது 26,000 ஒலிம்பிக் அளவு நீச்சல்குளங்களுக்குச் சமமாகும்.
ஜூரோங் தீவு நிறுவனங்கள் அங்கு 34,000 மரங்களை நடுவதற்கு கிட்டத்தட்ட $750,000 நிதி திரட்டியுள்ளதை அவர் சுட்டினார்.
எனினும், நீடித்த, நிலைத்தன்மைக்கான முயற்சிகள் வெற்றி பெற இன்னும் பேரளவு முயற்சிகள் தேவை என்றார் அவர். அதற்கு தொழில் துறை மாற வேண்டும் என்றும் கரியமிலம், எரிசக்தி ஆகியவற்றில் புதிய முயற்சிகளை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் டான் கூறினார்.

