தெமாசெக் அறநிறுவனம் வழங்கவுள்ள இலவச முகக்கவசங்களை வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை தீவு முழுவதும் உள்ள 130க்கும் அதிகமான இடங்களில் சிங்கப்பூர் வாசிகள் பெற்றுக்கொள்ளலாம்.
கெப்பிட்டலேண்ட் நிறுவனம் நடத்தும் 15 கடைத் தொகுதிகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெங் சியோங், பிரைம், கோல்ட் ஸ்டோரேஜ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, ஜயன்ட் ஆகிய பேரங்காடிக் கடைகளிலும் இலவச முகக்கவசங்கள் விநியோக்கிப்படும். தெமாசெக் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.
ஒவ்வொரு வீட்டுக்கும் 50 மருத்துவ ரக அறுவை சிகிச்சை முகக்கவசங்களும் 25 என்95 வகை முகக்கவசங்களும் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியது. இவை பெரியவர்கள் அணியக்கூடியவை.
குடியிருப்பாளர்கள் எஸ்பி குழும பொதுப் பயனீட்டுக் கட்டணத் தாளில் அல்லது மின்னியல் ஆவணத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கான கணக்கு எண்ணைக் காட்டி முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம். கணக்கு எண்களைப் பதிவு செய்துவிட்டு முகக்கவசங்கள் வழங்கப்படும்.
பிளாஸ்ட்டிக் கழிவுகளைக் குறைப்பதற்காக முகக்கவசங்களை எடுத்துச் செல்ல பைகள் வழங்கப் படாது. அதனால் பொதுமக்களைச் சொந்தமாகப் பைகளை எடுத்துவரும்படி தெமாசெக் அறநிறுவனம் கேட்டுக்கொண்டது.
கூட்டத்தைக் குறைக்க, 15 கெப்பிட்டலேண்ட் கடைத்தொகுதிகளில் 11ல் மின்னியல் வரிசைக்கான ஏற்பாடு செய்யப்படும். தங்கள் வரிசை எண் வரும்போது குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
பிடோக் கடைத்தொகுதி, ஜங்க்ஷன் எய்ட், வெஸ்ட்கேட், லாட் ஒன், தெம்பனிஸ் கடைத்தொகுதி போன்ற இடங்களில் மின்னியல் வரிசைமுறை செயல்படும்.
குறிப்பிட்ட கடைத்தொகுதிகளில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் எல்லாக் கடைத்தொகுதி களிலும் பேரங்காடிக் கடைகளிலும் முகக்கவசங்கள் விநியோகிக்கப் படாது என்று தெமாசெக் அறநிறுவனம் கூறியது.
மேலும், வேறொருவரின் வீட்டுவிவரங்களைக் காட்டி பொய்சொல்லி முகக்கவசங்களைப் பெறுவது குற்றம் என்று அறநிறுவனம் பொதுமக்களுக்கு நினைவுபடுத்தியது.
இலவச முகக்கவச விநியோகம் பற்றி கடந்த செவ்வாய்க்கிழமை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார் தெமாசெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹோ சிங்.
போதிய இருப்பு உள்ளதால் விநியோகத்தின் முதல் மூன்று நாட்களில் முகக்கவசங்களைப் பெற, அவசரப்பட்டு வரவேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

