நிலவனப்பைப் பராமரிக்கும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம், ஆண்டுக்கு 6.3% அதிகரிக்கவுள்ளது. இந்த அதிகரிப்பு ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்கும். நிலவனப்புத் தொழில்துறையின் சம்பள உயர்வு முறை தொடர்பான முத்தரப்புக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நேற்று ஏற்றுக்கொண்டது.
சம்பள அதிகரிப்பு 2023ஆம் ஆண்டு ஜூலை 1 தொடங்கி ஆறு ஆண்டுகள் நீடிக்கும். இதனால் 358 நிறுவனங்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர் மற்றும் நிரந்தரவாசி தொழிலாளர்கள் பலனடைவர்.
வெவ்வேறு திறன் நிலைகளைக் கொண்ட ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் குறித்தும் பயிற்சித் தேவைகள் குறித்தும் வரையறுப்பதே படிப்படியான சம்பள உயர்வு முறை. ஒரு துறையில் உள்ள ஊழியர்களது திறன்கள், உற்பத்தித்திறன், வேலைப் பொறுப்புகள் ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்களின் சம்பளம் உயர்வதை உறுதிசெய்ய இத்திட்டம் உதவுகிறது.
அரசாங்கம், சங்கங்கள், நிலவனப்புப் பராமரிப்புச் சேவை வழங்குநர்கள், வாடிக்கையாளர்கள் ஆகிய பிரதிநிதிகளைக் கொண்ட நிலவனப்புத் தொழில்துறைக்கான முத்தரப்புக் குழுமம் (டிசிஎல்), மறுஆய்வு செய்ததை அடுத்து இப்பரிந்துரைகளைச் செய்துள்ளது.
கரையோரப் பூந்தோட்டத்தில் நேற்று நிலவனப்புத் தொழிலாளர்களது பணிகளைப் பார்வையிட்ட மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது பின்னர் சம்பள அதிகரிப்பு குறித்தும் பேசினார்.
படிப்படியான சம்பள உயர்வு முறையை நடைமுறைப்படுத்திய வேறு தொழில்துறைகளில் சம்பள உயர்வு இருந்த பட்சத்தில் உள்ளூர் ஊழியரணியும் அதிகரித்ததென அவர் குறிப்பிட்டார். வேலை முன்னேற்றம், வாய்ப்புகள் இரண்டையும் அறிந்து ஊழியர்கள் அத்தொழில்துறைகளில் வந்து சேர்ந்ததாக அவர் கூறினார்.
இதற்கிடையே, முத்தரப்புக் குழு பரிந்துரை செய்திருந்த இரு புதிய வேலை பொறுப்புகளும் 2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும். நிலவனப்பு நிபுணர் மற்றும் மூத்த நிலவனப்பு நிபுணர் ஆகியவையே அந்த இரு புதிய பொறுப்புகள்.
நிலவனப்பு தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் கட்டாய பயிற்சித் தேவைகளை மேம்படுத்த வேண்டும் என்ற மூன்றாவது பரிந்துரையையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

