தனிமை உத்தரவை மீறியதற்காகவும் பிறருக்கு கொவிட்-19 தொற்றைப் பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தியதற்காகவும் இருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
டாமினிக்கன் ரிபப்ளிக் நாட்டிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் 30 அன்று சிங்கப்பூர் வந்தடைந்தனர் தனசேகரன் இளஞ்சேரன், 26, மற்றும் இயோ ஈ காய், 25. அன்றைய தினம் தொடங்கி மே 21 வரை இருவருக்கும் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆர்ச்சர்ட் பகுதியில் அமைந்துள்ள தனிமை வளாகத்திற்கு இரண்டு சிங்கப்பூரர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவரும் தங்களின் அறையிலேயே இருக்க வேண்டும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரி ஒருவர் விளக்கியிருந்தார். அத்துடன் தனிமை உத்தரவு காலம் முடியும்வரை வருகையாளர்களும் அவர்களின் அறைகளுக்குச் செல்லக்கூடாது.
இருப்பினும், மே 11ஆம் தேதியன்று தனசேகரன் தன் அறையை விட்டு பலமுறை வெளியேறியதுடன் முகக்கவசமின்றி பொது நடைபாதையில் நடந்து சென்றுள்ளார்.
அத்துடன் இயோ தங்கியிருந்த அறையில் இருவரும் சந்தித்தும் கொண்டனர். இயோவின் அறையில் தனசேகரன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இருந்ததாகக் கூறப்பட்டது.
இருவரும் மீண்டும் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாவர்.

