'இம்பர்ஃபக்ட் ஹார்மனி' என்ற தலைப்பில், சிங்கப்பூரில் இனங்களிடையே உள்ள உறவுகளைப் பற்றியும் இன நல்லிணக்கத்தைப் பற்றியும் 'எக்கோனமிஸ்ட்' சஞ்சிகையில் கட்டுரை வெளி வந்துள்ளது.
அதில், சீனர் பெரும்பான்மையினரை அதிகமாகக் கொண்டுள்ள சிங்கப்பூரில் தங்கள் அரசியல் சட்டபூர்வத்தன்மையை, சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் அமரர் லீ குவான் இயூவும் அவரது சகாக்களும் வேரூன்றச் செய்தியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் காரணமாகத்தான் நீண்ட காலமாகவே பதற்றமான நிலை நிலவி வருவதாகவும் அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது.
இந்தக் கருத்துகளுக்குப் பிரிட்டனுக்கான சிங்கப்பூர்த் தூதர் திரு லிம் துவான் குவான் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இனத்தின் அடிப்படையில் நாட்டை உருவாக்க நம் தலைவர்கள் மறுத்ததினாலேயே, சிங்கப்பூர் ஒரு தனி நாடாக உருவானது என்று திரு லிம் அச்சஞ்சிகைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டார்.
திரு லிம் அனுப்பிய கடிதம் சஞ்சிகையின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.
மேலும், 1965ல் மலாய் இன மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த மலேசியாவிடம் இருந்து பிரிந்தபோது, சீனப் பெரும்பான்மை சார்ந்த அரசியல் பாதையை மேற்கொள்வதே திரு லீ குவான் இயூக்கும் அவருடன் பணி புரிந்தோருக்கும் சுலபமாக இருந்திருக்கும் என்றார் திரு லிம்.
ஆனால் தடைகளைத் துணிவுடன் சந்தித்து, பல இன சமுதாயத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீன மொழிக்குப் பதிலாக ஆங்கிலத்தைத் தலைமை மொழியாகத் தேர்ந்தெடுத்ததையும் ஒவ்வோர் இனத்திற்கும் சமயத்துக்கும் மொழிக்கும் தங்களது மரபுடைமைகளையும் கலாசாரத்தையும் வளர்த்துக்கொள்ள சுதந்திரம் வழங்கப்பட்டதைப் பற்றியும் அவர் கூறினார்.
அக்கட்டுரையில் சிறுபான்மையினர் ஒதுக்கப்படுகிறார்கள் என்றும் அடுத்தடுத்து வரும் பிரதமர்கள் சீனர்களாக இருப்பதினால் சீன இனத்தவர்களுக்குத் தொடர்ந்து அதிக சலுகை பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஆயுதப்படை மற்றும் பாதுகாப்புப் படைகள் உட்பட அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளிலும் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், யுரேஷியர்கள் ஆகியோர் பதவி வகிப்பதை திரு லிம் சுட்டினார்.
இன்று சிங்கப்பூர் அமைச்சரவையில் உள்ள 20 பேரில் எழுவர் சிறுபான்மை இனத்தவர் என்றும் தலைமை நீதிபதியும் உச்ச நீதிமன்றத்தின் 33 நீதிபதிகளில் ஒன்பது பேரும் சிறுபான்மையினர் என்பதையும் திரு லிம் சுட்டிக் காட்டினார்.

