கடந்த 2019ஆம் ஆண்டில் லக்கி பிளாசாவில் பெண்கள் இருவர் உயிரிழக்கக் காரணமான கார் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஆடவர், அடுத்த மாதம் 24ஆம் தேதி தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நடந்த வழக்குக்கு முந்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து சோங் கிம் ஹோ (படம்) என்ற இந்த 65 வயது மலேசியர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகச் சென்ற மாதமே சிங்கப்பூர் நிரந்தரவாசியான சோங் கோடிகாட்டியபோதும், நீதிமன்ற ஆவணங்களுக்கும் சோங் கூறியதற்கும் சற்று முரண்பாடு இருந்ததால் இவரது வாதம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
2019 டிசம்பர் 29ஆம் தேதி, மாலை 5 மணியளவில் லக்கி பிளாசாவிற்கு அருகே சோங் காரை ஓட்டிச் சென்றபோது, அது ஆறு பிலிப்பீன்ஸ் பெண்கள்மீது மோதியது. அவர்களில் இருவர் மாண்டுவிட்டனர். இதர நால்வரும் காயமுற்றனர். அவர்களில் மூவர்க்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அபாயகரமாக காரை ஓட்டியதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் சோங்மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஆர்ச்சர்ட் கடைத்தொகுதிக்கு அருகே, நட்மெக் சாலையில் காரை 'யு-டர்ன்' செய்ய முயன்றபோது, முடுக்கியை (ஆக்சலரேட்டர்) சோங் அழுத்திவிட்டதாகச் சொல்லப்பட்டது.
சோங் ஓட்டிச் சென்ற கார் தடுப்புக் கம்பிகளை உடைத்துக்கொண்டு, லக்கி பிளாசா துணைச் சாலையில் பாய்ந்ததாகவும் அதன்பின் அந்தப் பெண்கள் அறுவர்மீது மோதியதாகவும் கூறப்பட்டது.
அவ்விபத்தில் அபிகைல் டனாவ் லெஸ்டே, 41, அர்லின் பிக்கர் நூக்கோஸ், 50, என்ற இருவர் மாண்டுபோயினர். 44 வயது நிரம்பிய இருவரும் 56 மற்றும் 37 வயதில் தலா ஒருவரும் காயமடைந்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டோர்க்காக, கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் இணையம் வழியாக 360,000 வெள்ளிக்கும் கூடுதலான தொகை திரட்டப்பட்டது. விபத்தில் இறந்த இருவரின் குடும்பத்தினர்க்காகவும் காயமடைந்த நால்வர்க்கு உதவவும் அத்தொகை திரட்டப்பட்டது.

