ஒரு வார காலமாக 42 உடற்பிடிப்பு சேவை நிலையங்களிலும் உரிமம் இன்றிச் செயல்பட்ட ஒன்பது கேளிக்கை நிலையங்களிலும் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளைத் தொடர்ந்து, 45 பேரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சாங் சான் சாலையில் 'கேடிவி' போன்று உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த கேளிக்கை நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், செல்லத்தக்க வேலை அனுமதிச்சீட்டு இன்றி வேலை செய்த 30 முதல் 35 வயதிற்குட்பட்ட பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய சந்தேகத்தின்பேரில், அவ்வளாகத்தில் இருந்த 11 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
அந்நிலைய நிர்வாகத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பொதுக் கேளிக்கைகள் சட்டம் மற்றும் மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் 40 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 17 நிலையங்கள், உடற்பிடிப்புத் தொழிலகங்கள் சட்டம், கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு ஆணை) விதிமுறைகள் 2020 உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் தொடர்பான விதிகளை மீறிவிட்டதாக நம்பப்படுகிறது.
அவற்றில் மூன்று நிலையங்கள் முறையான உரிமமின்றிச் செயல்பட்டதாகவும் இன்னொரு நிலையம் உடற்பிடிப்பு சேவை வழங்கியபோது வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்யத் தவறிவிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
நிலைய நடத்துநர்கள், உடற்பிடிப்பு சேவையாளர்கள், வாடிக்கையாளர் ஒருவர் என 29 பேரிடம் விசாரணை தொடர்கிறது.
பாலியல் குற்றங்களையும் மற்ற சட்டவிரோத நடவடிக்கைகளையும் ஒடுக்க, உடற்பிடிப்பு சேவை நிலையங்கள், சட்டவிரோதமாகச் செயல்படும் கேடிவி நிலையங்கள்மீது தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.