ஹவ்காங் அவென்யூ 8ல் கொவிட்-19 தொற்றுக் குழுமம் தலைகாட்டி இருப்பதற்கு அந்தப் பகுதியில் ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டது காரணமாக இருக்கக்கூடும்.
என்றாலும் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியாமல் புதி ரான முறையில் இத்தகைய குழுமங்கள் தலையெடுக்கும் சூழல் சாத்தியம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஹவ்காங் அவென்யூ 8 தொற்றுக் குழுமம் பற்றி கடந்த வியாழக்கிழமை முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. ஜயன்ட் பேரங்காடியை உள்ளடக்கிய அந்தக் குழுமத்தில் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தொற்றுக் குழுமத்திற்கு முந்தைய தொற்றுக் குழுமங்களே காரணம் என்று கூறுவது இப்போது அவ்வளவாக பொருத்தமில்லாதது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொது சுகாதாரப் பள்ளியின் துறைத் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் கூறுகிறார்.
மேலும் அதிக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்நிலையில், கிருமி தொற்றியோரிடம் அறிகுறிகள் தெரியாமலேயே இருக்க முடியும். அல்லது இலேசான அறிகுறிகள் மட்டும் தெரிய வாய்ப்புண்டு.
தங்களுக்கு கிருமித்தொற்று இருக்கிறது என்பது அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாமல் இருக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கை யில் மேலும் தொற்றுக் குழுமங்களை சிங்கப்பூர் எதிர்பார்க்க வேண்டும் என்றாரவர்.
ஒருவருக்கு எங்கே எப்படி தொற்று ஏற்பட்டது என்பதில் நாம் கவனம் செலுத்தக் கூடாது என்றார் அவர். யாருக்காவது சளிக்காய்ச்சல் ஏற்பட்டால் அது எந்த இடத்தில் இருந்து அவருக்கு தொற்றியது என்பதில் நாம் கவனம் செலுத்துவதில்லை.
இதேபோன்ற ஒரு போக்கே எதிர்காலத்தில் கொவிட்-19 தொற்றிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் டியோ தெரிவித்தார்.
இதனிடையே, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோய் பிரிவின் மூத்த ஆலோசகரான பேராசிரியர் டேல் ஃபிஷர், உண்மையில் எதிர்காலத்தில் புதிர்போன்ற புரிந்துகொள்ள முடியாத தொற்றுகள் சாத்தியம் என்றார். கொவிட்-19 கிருமியுடன் நாம் வாழும் காலத்தில் இது வழமையான ஒன்றாகிவிடும் என்று அவர் கூறினார்.
தடுப்பூசி காரணமாக இப்போது உயிருக்கு ஏற்படக்கூடிய மிரட்டல்கள் குறைந்து இருப்பதால் முன்பு நாம் செயல்பட்டதைப் போல செயல்பட வேண்டிய தேவை இராது என்று பேராசிரியர் ஃபிஷர் குறிப்பிட்டார்.

