சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி சமூகத்தில் புதிதாக 29 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் ஒன்பது பேர் முந்தைய கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். இதர மூன்று பேருக்கு முந்தைய நோயாளிகளுடன் தொடர்புண்டு என்றாலும் இவர்களுக்குத் தொற்று தெரியவந்தபோது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவில்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் இதர 17 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு புதிதாக ஆளானவர்களில் 70 வயதைக் கடந்த முதியவர் ஒருவரும் அடங்குவார். அவர் ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார்.
கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடிய ஆபத்து அவருக்கு இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
வெளிநாடுகளில் இருந்து வந்த ஆறு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் இங்கு தரையிறங்கியபோது தனிமைப்படுத்தப்பட்டனர். அல்லது தனிமை உத்தரவு அவர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
இங்கு வந்து தரையிறங்கியபோது அவர்களில் ஐந்து பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. மற்றொருவருக்கு தனிமை உத்தரவு நிறைவேற்றப்பட்டபோது தொற்று ஏற்பட்டதாக அமைச்சு கூறியது.
புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66,478 ஆகியது.
கொவிட்-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் மொத்தம் 47 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். அவர்களில் 10 பேர் இந்த மாதம் மாண்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஞ்சிய 37 பேர் சென்ற ஆண்டு ஜனவரிக்கும் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இடையில் மரணமடைந்தவர்கள்.

