பிடோக் தொழிற்பேட்டை E-ல் உள்ள தொழில்துறை கட்டடம் ஒன்றின் கான்கிரீட் கூரைப் பகுதிகள் இடிந்து தரையில் விழுந்துவிட்டன.
இதையடுத்து கட்டட, கட்டுமான ஆணையம் சம்பவம் நிகழ்ந்த இடத்தைச் சுற்றி அடைத்தது.
கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணிகள் நேற்று நடந்தன.
அந்த நான்கு மாடி கட்டடத்தின் கூரையில் இருந்து இடிந்து தொங்கிக்கொண்டு இருந்த கான்கிரீட் பகுதிகளை அகற்றவும் நேற்று பணிகள் நடந்ததாக அறிக்கை ஒன்றில் இந்த ஆணையம் தெரிவித்தது.
கூரைப் பகுதி இடிந்த சம்பவம் பற்றி நேற்றுக் காலை தனக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்த ஆணையம், இடிந்து தொங்கும் கான்கீரிட் பகுதிகளைப் பத்திரமாக எப்படி அகற்றுவது என்பது பற்றி யோசனை கூறுவதற்காக நிபுணத்துவ பொறியாளர் ஒருவரை அனுப்பும்படி அந்தக் கட்டட உரிமையாளரான ஜூரோங் நகராண்மைக் கழகத்தைக் கேட்டுக்கொண்டது.
அந்தச் சம்பவம் பற்றி விரிவான புலன்விசாரணையைத் தான் நடத்தி வருவதாகவும் அறிக்கையில் ஆணையம் குறிப்பிட்டது.
அந்தப் பொறியாளர், நிரந்தரமான சரியாக்க பணிகளையும் பரிந்துரைக்கலாம். அதேபோன்ற கான்கிரீட் வடிவமைப்புகளைக் கொண்ட பக்கத்தில் உள்ள மூன்று கட்டடங்களை அந்தப் பொறியாளர் பரிசோதிப்பார்.
ஜூரோங் நகராண்மைக் கழகம் அமர்த்திய அந்தப் பொறியாளர், பிரதான கட்டடத்தைப் பரிசோதித்ததாகவும் அதன் கட்டுமானம் வலுவாக இருப்பதாக அவர் மதிப்பிட்டதாகவும் ஆணையம் அறிக்கையில் தெரிவித்தது.

