ஹவ்காங் அவென்யூ 8ல் இருக்கும் புளோக் 683ல் செயல்படும் ஜயண்ட் பேரங்காடியில் தொற்றுக் குழுமம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் வியாபாரம் குறைந்துள்ளதாக பலரும் தெரிவித்தனர்.
அந்த புளோக்குக்கு எதிரே சாலைக்கு அப்பால் உள்ள புளோக் 506ல் கடந்த ஜூன் மாதம் தொற்று காணப்பட்டது.
புளோக் 506 தொற்றுக் குழுமம் இப்போது இல்லை.
என்றாலும்கூட கிருமித்தொற்று தலைகாட்டியதை அடுத்து அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் கணிசமாகக் குறைந்துவிட்டதாக திருவாட்டி மிச்செல் கோ என்பவர் கூறினார்.
இவர், அருகே இருக்கும் ஹவ்காங் வில்லேஜில் தாவரங்களையும் பண்ணைப் பொருட்களையும் விற்கும் சந்தைக் கடை வைத்துள்ளார். "சந்தைக்கு வர யாருக்கும் துணிச்சல் இல்லை. என் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் கூட வருவதில்லை. வியாபாரம் பெரிதும் பாதித்துவிட்டது," என்றார் இவர்.
புளோக் 682ல் 1988 முதல் சீன மருந்துக் கடை நடத்தி வரும் சான் சீ ஞொ, 81, என்பவர், "தொற்று தொடங்கியது முதலே மக்கள் வெளியே வர அஞ்சத் தொடங்கிவிட்டனர். எனக்கு வியாபாரம் போய்விட்டது.
"என் பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு அடுத்த மாதம் முதல் கடையை மூடவிருக்கிறேன்," என்று கூறினார்.
புளோக் 682 காப்பிக்கடையில் வேலை பார்க்கும் திருவாட்டி சென் கின் யூன், 50, என்பவர் ஜயண்ட் பேரங்காடி தொற்றுக் குழுமம் தெரியவந்ததை அடுத்து வியாபாரம் 30 விழுக்காடு குறைந்துவிட்டதாகக் கூறினார்.
இதனிடையே, அந்தப் பேரங்காடி அமைந்துள்ள பகுதியைப் பிரதிநிதிக்கும் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட், தன்னுடைய குழுவினர் அந்தப் பேரங்காடிக்கு வெளிப்புறப் பகுதிகளிலும் சுற்றிலும் உள்ள பொது இடங்களிலும் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு தூய்மைப்படுத்தியதாகக் கூறினார்.
மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டதாக கடைக்காரர்கள் கூறுவதாக தனக்குத் தகவல் கிடைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புளோக் 506 அமைந்துள்ள தொகுதியைப் பிரதிநிதிக்கும் அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் ஜெரால்டு ஜியாம், தான் வெள்ளிக்கிழமையன்று புளோக் 501 முதல் 533 வரைப்பட்ட புளோக்குகளில் வசிக்கும் மக்களைச் சந்தித்து பேசியதாகக் கூறினார்.
பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகளுடன் ஆகப் புதிய நிலவரங்களையும் கருத்தில்கொண்டு செயல்படுகிறார்கள் என்றாரவர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை முற்பகல் 9.45 மணிக்கு புளோக் 683க்குச் சென்று பார்த்தபோது, பக்கத்தில் உள்ள உணவங்காடி நிலையத்தில் மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் ஈரச்சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டும் இருந்தார்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் சனிக்கிழமை தெரிவித்தது.

