வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளிக்குச் செல்லாமல் சிலர் தனியார் பயிற்றுவிப்பாளர்களிடம் சென்று பயிற்சி பெறுவதுண்டு.
சிங்கப்பூரில் 75 வயதைத் தாண்டியவர்கள் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர்களாக இருக்கமுடியாது.
ஆனால் பெரும்பாலான தனியார் பயிற்றுவிப்பாளர்கள் 75 வயதைத் தொட்டவர்கள் அல்லது விரைவில் தொடவிருப்பவர்கள். சிலர் 40 ஆண்டுகளுக்கும் மேல் இதில் ஈடுபட்டவர்கள்.
தற்போது தனியார் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர்களாக இருப்போர் சராசரியாக 65லிருந்து 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சிங்கப்பூர் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர் சங்கம் தெரிவித்தது.
375 தனியார் பயிற்றுவிப்பாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் 59 வயதுக்கும் 74 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் போலிசார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தனர். 1987ஆம் ஆண்டில் தனியார் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர் உரிமங்கள் வழங்குவதை நிறுத்தினர். இன்னும் சுமார் 15 ஆண்டுகளில் தனியார் பயிற்றுவிப்பாளர்கள் அறவே இருக்கமாட்டார்கள். அனைவரும் வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளிகளுக்குச் சென்றுதான் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளிகளில் ஒவ்வொரு பயிற்சியையும் வேறு பயிற்றுவிப்பாளர் நடத்துவார். எல்லா பயிற்சிகளையும் ஒரே பயிற்றுவிப்பாளர் நடத்துவதை விரும்புபவர்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 8.50 வெள்ளி கூடுதலாகச் செலுத்தவேண்டும். வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளிகளுக்குக் சென்று கற்றுக்கொள்வதுதான் சாலைப் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்ய உதவும் என போலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்து அம்சங்களையும் அடக்கி நன்கு வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் பள்ளிகளில் இருப்பது அதற்குக் காரணம் என்று அவர்கள் கூறினர்.சிங்கப்பூரில் தற்போது 'எஸ்எஸ்டிசி' எனப்படும் 'சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர்' வாகனமோட்டும் பயிற்சி நிலையம், புக்கிட் பாத்தோக் வாகனமோட்டும் பயிற்சி நிலையம், கம்ஃபர்ட்டெல்குரோ வாகனமோட்டும் பயிற்சி நிலையம் ஆகியவை உள்ளன.

