கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளைத் தெரிந்தே மீறுவோர்க்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக 'வார்த்தைகளை அவிழ்த்துவிடுவது' கவலையளிப்பதாக உள்ளது என்றும் அது மனநலம் குறித்த வடுவை மேலும் ஆழமாக்கக்கூடிய அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
தெரிந்தே விதிமீறுவோர், மனநலப் பிரச்சினையால் அதைச் செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம் என்பதை திரு மசகோஸ் ஒத்துக்கொண்டார்.
ஆனால், "அத்தகைய செயல்களை மனநலத்துடன் இணைத்துப் பேசுவது, அவ்விஷயத்தை அற்பமானதாக மட்டும் ஆக்காமல், விழிப்புணர்வு இல்லாமையையும் வெளிப்படுத்திவிடும். மனநலம் குறித்த அறிவை மேம்படுத்த உறுதியாக நம்மால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும்," என்றார் அவர்.
நேற்று நடைபெற்ற 'சிங்கப்பூர் மனநலக் கருத்தரங்கு 2021' நிகழ்ச்சியின்போது அமைச்சர் மசகோஸ் இவ்வாறு பேசினார்.
மனிதர்கள் இயல்பிலேயே சமூகப் படைப்புகள் என்று குறிப்பிட்ட திரு மசகோஸ், அவர்கள் தங்களது அன்றாட சமூக உறவாடல்களைப் புதையல்போலப் பார்க்கின்றனர் என்று சொன்னார்.
"கொவிட்-19 காலகட்டத்தில் நம் அன்புக்குரியவர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள், பழகியவர்கள், தெரிந்தவர்கள் என்று சமூகத்தில் உள்ள பலருடனும் பெரும்பாலும் நம்மால் உறவாட இயலவில்லை. மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் இந்தக் கடினமான நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று. அதே வேளையில், சமூக அளவில் மக்கள் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தையும் அது ஏற்படுத்திவிட்டது," என்று திரு மசகோஸ் தெரிவித்தார்.
"அத்துடன், கொரோனா தொற்றிவிடுமோ என்ற பதற்றமும் வாழ்வாதார இடையூறுகளால் ஏற்பட்ட நிதிப் பிரச்சினையும், நல்வாழ்வுமீது தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன," என்றார் அவர்.
கொவிட்-19 சூழல் ஏற்படுத்தியுள்ள மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் ஏற்கெனவே பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.

