பாதுகாப்பு இடைவெளித் தூதர் ஒருவர் தம்மைத் திருட்டுத்தனமாகப் பின்தொடர்வதாகப் பெண் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பாதுகாப்பு இடைவெளி வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து வாடிக்கையாளர் ஒருவரிடம் பேச அப்பெண்ணுக்கு அந்த ஆடவர் உதவியதாகக் கூறப்பட்டது.
அதன்பின், அந்த 20 வயதுப் பெண்ணிடம், 'அவர் அழகாக இருப்பதாகக் கூறி, அவருக்கு எப்போது விடுப்புநாள் என்றும் காதலர் இருக்கிறாரா என்றும்' அந்த ஆடவர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
குமாரி இஸபெல் என அறியப்படும் அந்த இளம்பெண் தெம்பனிஸ் 1ல் உள்ள ஓர் உணவகத்தில் பணிபுரிகிறார்.
"எனது கைபேசி எண்ணை அவர் கேட்டார். இன்ஸ்டகிராமில் கணக்கு வைத்துள்ளேனா என்றும் கேட்டார். அழகான தோழிகள் இருந்தால் அவர்களைத் தனக்கு அறிமுகம் செய்து வைக்க முடியுமா என்றும் கேட்டார்," என்றார் அந்த இளம்பெண்.
ஒரு மாதத்திற்குப் பிறகு தமது கைபேசி எண்ணை இஸபெல் அந்த ஆடவரிடம் கொடுத்தார்.
"அதற்காக இப்போது பெரிதும் வருத்தப்படுகிறேன். நான் முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். இல்லையேல், போலியான எண்ணைத் தந்திருக்க வேண்டும்," என்றார் அவர்.
இவ்வாண்டுத் தொடக்கத்தில், இஸபெல்லைப் புகைப்படம் எடுத்த அந்த ஆடவர், அதை அவருக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
"அதன்பின் என்னைப் படம் எடுக்கக்கூடாது என்று அவரிடம் சொன்னேன்," என்றார் இஸபெல்.
அதன்பின் நண்பகல் உணவு நேரத்தின்போது அவர் தம்மைப் பின்தொடர்ந்ததாகவும் தம்மிடம் பேச முற்பட்டதாகவும் இஸபெல் சொன்னார்.
கடைசியாக இவ்வாண்டு ஏப்ரலில் தாம் அந்த ஆடவரைக் கண்டதாக அவர் சொன்னார்.
அந்தப் பாதுகாப்பு இடைவெளித் தூதர்மீது புகார் அளிக்கப்பட்டதைக் காவல்துறை உறுதிசெய்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
இதன் தொடர்பில் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு விசாரித்து வருவதாகவும் அது முடிந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

