சிங்கப்பூர் மீண்டும் அதன் பொருளியலைத் திறப்பதிலும் கிருமித்தொற்றுக்கு முந்தைய வழக்கநிலையை எட்ட முயல்வதிலும் தனது சூழ்நிலைக்கு ஏற்ப தனிப்பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை இன்னமும் மேம்பட வேண்டும் என்றும் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மீது தாளாத சுமை ஏற்படுத்தும் அளவுக்கு தொற்றுப்பரவல் பெருகுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திரு வோங் கூறினார்.
கொவிட்-19 பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
சிங்கப்பூர் எந்த வேகத்திலும் எந்த அளவுக்கும் திறக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளதைச் சுட்டிய திரு வோங், நியூசிலாந்து, சீனா போன்ற நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை நடப்புக்கு கொண்டுவந்து, கிருமித்தொற்றை ஒழித்த பின்னரே பொருளியலைத் திறப்பது சிங்கப்பூருக்கு சாத்தியப்படாது என்று கூறினார்.