ஹாங்காங், மக்காவ் ஆகிய நகர்களிலிருந்து சிங்கப்பூருக்கு வர 200க்கும் மேற்பட்ட குறுகியகால வருகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்தத் தகவலை இன்று (ஆகஸ்ட் 25) தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி, ஹாங்காங்கிலிருந்து 230 பேருக்கும் மக்காவ் நகரிலிருந்து 13 பேருக்கும் சிங்கப்பூர் வர விமானப் பயண அனுமதியைத் தான் வழங்கியிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
நாளை (ஆகஸ்ட் 26) முதல் அவர்கள் சிங்கப்பூருக்கு வர அந்தப் பயணச்சீட்டு அனுமதி வழங்கும். அவற்றுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கின.
சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் பயணிகள் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். அதில் ‘தொற்று இல்லை’ எனத் தெரியவந்தால் சிங்கப்பூரில் தங்களது சொந்த நடவடிக்கைகளைப் பயணிகள் மேற்கொள்ளலாம். வசிப்பிடத்தில் இருக்கும் கட்டாய உத்தரவை அவர்கள் நிறைவேற்ற தேவையிராது.
ஆனால், சிங்கப்பூரில் இருக்கும் காலத்தில் அவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘டிரேஸ்டுகெதர்’ செயலியை அவர்கள் பயன்படுத்த வேண்டும்.