டிரேஸ்டுகெதர் கருவியை முதல் முறையாகப் பெறுவோர், அவற்றை அஞ்சல் மூலம் பெறும் சேவைக்குப் பதிந்து கொள்ளலாம் என்று அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்கத்துக்கான அலுவலகம் நேற்று தெரிவித்தது.
அத்துடன், மாற்று டிரேஸ்டுகெதர் கருவிகளை வழங்க ஊழியர்கள் சேவையாற்றும் முகப்புகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு தானியங்கி விநியோக இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கடைத்தொகுதிகளில் மாற்று டிரேஸ்டுகெதர் கருவிகளை விநியோகிக்கும் விநியோக இயந்திரங்கள் இன்று வைக்கப்பட்டுள்ளன. அதே போல் வரும் 30ஆம் தேதியிலிருந்து அக்டோபர் மாத இறுதிக்குள் சமூக மன்றங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்படும்.
இயந்திரங்கள் வைக்கப்பட்ட பின்னர் 17 கடைத்தொகுதிகளில் தற்போது இயங்கிவரும் ஊழியர் உள்ள முகப்புகள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் மூடப்படும்.
சமூக மன்றங்களில் உள்ள ஊழியர் உள்ள முகப்புகள் பின்னொரு தேதியில் குறைக்கப்படும் என்று அலுவலகம் கூறியது.
டிரேஸ்டுகெதர் கருவிகளை முதன்முறையாகப் பெற்றுக்கொள்வோர், வீட்டுக்கு அவற்றை அனுப்பி வைக்கும் சேவையைப் பெற விரும்பினால் தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி அச்சேவைக்குப் பதிந்துகொள்ளலாம்: www.token.gowhere.gov.sg
டிரேஸ்டுகெதர் கருவிகள் அவர்களின் அஞ்சல்பெட்டியில் சேர்க்கப்படும்.
ஏற்கெனவே உள்ள டிரேஸ்டுகெதர் கருவிகளை மாற்றுவதற்கு இச்சேவையைப் பயன்படுத்த முடியாது.
முகக்கவசங்களை விநியோகிக்கும் இயந்திரங்களை டிரேஸ்டுகெதர் கருவிகளை விநியோகிக்கும் இயந்திரங்களாக மாற்ற தெமாசெக் அறநிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றி வருவதாக அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்கத்துக்கான அலுவலகம் கூறியது.
கடந்த ஜூலை 26ஆம் தேதி நெக்ஸ், சன் பிளாஸா கடைத்தொகுதிகளில் அந்த இயந்திாங்கள் வைக்கப்பட்டன. அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாக அலுவலகம் கூறியது.
இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள 108 சமூக மன்றங்களிலும் அதிகமானவர்கள் சென்று வரும் 40 கடைத்தொகுதிகளிலும் இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு இயந்திரத்திலும் 1,400 கருவிகள் வைக்கப்படும் என்றும் அவற்றில் மின்கலம் தீர்ந்த அல்லது செயல்டாத கருவிகளை புதிய கருவிகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

