பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியில் உள்ள பிஎச்ஜி பகுதிவாரிக் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து துப்புரவுப் பணிகளுக்காக அக்கடை நேற்று மூடப்பட்டது.
அதனை நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்த பிஎச்ஜி, கடந்த செவ்வாய்க் கிழமையன்று தனது ஊழியர்களில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாகக் கூறியது.
"அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஊழியர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சளி/எச்சில் பரிசோதனைக்குச் செல்லும்படி நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்," என்று பிஎச்ஜி மேலும் கூறியது. அக்கடை இன்று மீண்டும் திறக்கப்படும் என்று அது சொன்னது.
பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியுடன் தொடர்புடைய 20 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப தேவையான துப்புரவுப் பணிகளை பூகிஸ் ஜங்ஷன் மேற்கொண்டு வருவதாக அக்கடைத்தொகுதியின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
அக்கடைத்தொகுதியில் 'யக்குன் காயா டோஸ்ட்' ரொட்டிக் கடையில் பணியாற்றும் கூங் வெய் ஹியோங் எனும் ஊழியர் ஒருவர், "இரு வாரங்களுக்கு ஒருமுறை நாங்கள் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்குச் செல்கிறோம். எனவே, நிலவரம் பற்றி எங்களுக்குப் பெரிதாக பதற்றம் எதுவும் ஏற்படவில்லை," என்று கூறினார்.
"இன்று (புதன்கிழமை) கடைத்தொகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. கிருமித்தொற்றுக் குழுமம் உருவெடுத்துள்ளது பற்றி செய்தி அறிந்து அவர்கள் இங்கு வர அஞ்சக்கூடும்," என்றார் அந்த ஊழியர்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்றவர்கள் அல்லது அதன் வசதிகளைப் பயன் படுத்திய பொதுமக்கள் இலவசப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது.
அக்கடைத்தொகுதியில் புகுந்து அருகில் உள்ள கட்டடங்களுக்கு அல்லது பூகிஸ் எம்ஆர்டி நிலையத் துக்குச் சென்றவர்கள் பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என்று அமைச்சு தெரிவித்தது.

