இர்ஷாத் முஹம்மது
வானொலி படைப்புகள், நாடகங்கள், கவிதைகள், கதை, என பல வழிகளில் தமது கருத்துகளை வெளிக்கொண்டு வந்த முன்னோடி வானொலி படைப்பாளரும் எழுத் தாளருமான மறைந்த திரு கா.பெருமாளின் ஆவணங்களை அவரது குடும்பத்தினர் தேசிய நூலக வாரியத்திற்கும் தேசிய ஆவணக் காப்பகத்திற்கும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கையெழுத்துப் பிரதிகள் முதல் அச்சிடப்பட்ட நாடக வசனங்கள் வரை ஏராளமான அரிய ஆவணங்களை சமூகத்தில் மேலும் பலரும் பார்த்து பலன் அடைய வழங்கியுள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டார் திரு பெருமாளின் மூத்த மகன் திரு திருத்தக்க தேவன்.
"என் அப்பாவின் மறைவிற்குப் பிறகு பல முறை அவரது படைப்புகளை ஆவணப்படுத்தவேண்டும் என்று நானே முற்பட்டுள்ளேன். ஆனால் வேலைப் பளு காரணமாக இதுவரை என்னால் செய்ய முடியாத நிலையில் தேசிய நூலக வாரியம் முன்வந்து இந்த அரிய படைப்புகளைப் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி தருகிறது," என்றார் அவர்.
"அவர் எழுதிய அனைத்தையும் மிகவும் தெளிவான முறையில் அவர் அடையாளக் குறிப்புடன் 'கேட்டலாக்' செய்து வைத்துள்ளார்.
எழுதப்பட்ட தேதி முதற்கொண்டு அனைத்துத் தகவல்களையும் முறைப்படுத்தி வைத்துள்ளார்," என்று விளக்கினார் திரு தேவன்.
தம்பி பிறந்தபோது மருத்துவ மனையில் அம்மா இருந்ததால் தமது தந்தை கேல்டிகாட் ஒளிபரப்புக் கழகத்திற்கு வேலைக்குச் சென்றபோது கூடவே சேர்ந்து போன நினைவுகளைப் பகிர்ந்த அவர், கடமையில் கட்டுப்பாட்டுடனும் நேர ஒழுங்கில் கெடுபிடியாகவும் தந்தை இருப்பார் என்றார்.
அவரிடம் கற்றுக்கொண்டவர்கள் பலர் உள்ளனர் என்றும் தமது 15 வயதில் தந்தை மறைந்ததால் அவரிடம் நிறைய நேரத்தை செல விடாத குறை இன்றும் உள்ளது என்று திரு தேவன் கூறினார்.
"ஒளிநாடாவில் என் அப்பா பதிவுசெய்து வைத்த தமது வானொலிப் படைப்புகள் ஏராளம் உள்ளன. இதை எப்படியாவது மின்னிலக்கம் செய்துவிடவேண்டும்," என்று தமது வேட்கையைப் பகிர்ந்தார் தேவன். இந்த ஆண்டு திரு கா.பெருமாளின் நூற்றாண்டு என்பதையும் அவர் தெரிவித்தார்.
கொடையாக அளிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கிடைப்பதே அவரது எண்ணம்.
"என் தந்தையின் ஆசையும் அதுவாகத் தானே இருக்கும். அவர் எழுதியவற்றையெல்லாம் மக்களுக்காக ஒலிபரப்பு மூலம் கொண்டு சென்றார். மலாயாவில் கேமரன் மலைப் பகுதியில் வளர்ந்த அவர், தோட்டபுறத்தில் வேலை செய்தவர்களின் கஷ்டங்களைப் பார்த்து அவர்களின் உத்வேகத்திற்காக எழுதிய கவிதைகள் ஏராளம்," என்றார்.
நாள்காட்டியின் பின்புறத்திலோ கடிதங்களின் உரைகளிலோ எழுதிய சிறு கவிதை வரிகளையும் அவர் சேகரித்து வைத்துள்ளதை சுட்டிய திரு தேவன், அவை நன்கொடையாக வழங்கப்பட்ட ஆவணங்களில் அடங்கியுள்ளன என்றார். 1940கள் தொடங்கி திரு பெருமாள் மறையும் வரையிலான வரலாற்றுப் பதிவுகள் அவற்றில் அடங்கும்.
"என் தந்தையின் படைப்புகளில் சமூக வரலாற்றின் பிரதிபலிப்பைக் காணலாம். காரணம் அவரது சமகால சூழலைக் கொண்டே அவர் தமது படைப்புகளை எழுதியுள்ளார். குறிப்பாக அவரது நாட்டுப் பற்று படைப்புகள் ஏராளமமாக உள்ளன," என்றார திரு திருத்தக்கதேவன்.
நாமக்கலில் பிறந்து மலாயா, சிங்கப்பூர் வானொலித் துறையில் தடம்பதித்த நாத்திகரான திரு பெருமாள், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமயங்கள் குறித்த படைப்பு களையும் எழுதியுள்ளார்.

