150 வெள்ளியை தனக்கு திரும்பக் கொடுக்காததால் தங்கையின் மனநல சிகிச்சை குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அண்ணனுக்கு எட்டு மாதங்கள், 12 வார்ம சிறைத் தண்டனையும் 2,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. அதோடு, வரவுசெலவுத் திட்டம் 2020ல் தங்கைக்கு வழங்கப்பட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளையும் அவரின் அஞ்சல் பெட்டியிலிருந்து அவர் திருடியிருக்கிறார்.
தங்கையின் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணச் சீட்டின் படத்தை 36 வயது சியாஹ்ரெல் முகமது இன்ஸ்டகிராமில் வெளியிட்டார். படத்திற்குக் கீழ் தங்கையின் மனநிலையைக் கேலி செய்து அவர் கருத்துகளையும் பதிவுசெய்தார்.
அப்போது அவரின் தங்கை மனநலக் கழகத்தில் சிகிச்சை பெற்றுவந்தார்.
வேண்டுமென்றே மனவுளைச்சலை அளித்தது, அவசரப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்துகொண்டது, பயமுறுத்தும் வகையில் மிரட்டியது, திருட்டு உட்பட ஏழு குற்றச்சாட்டுகளை சியாஹ்ரெல் நேற்று ஒப்புக்கொண்டார்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதியன்று மற்றொரு சம்பவத்திலும் சியாஹ்ரெல் ஈடுபட்டிருந்தார். அவருக்கும் ஒரு நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் சியாஹ்ரெல் அந்நபரின் சைக்கிளின் முன் சக்கரத்தைப் பூட்டியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து சைக்கிளை ஓட்ட முயன்ற நபர் கீழே விழுந்ததால் அவரின் காலில் காயமுற்றது. ஆனால் அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை.

