கெப்பல் பே நீர்முகப்பு, படகோட்டப் பகுதியில் 5ஜி கைபேசி கட்டமைப்பில் இயங்கும் கண்காணிப்பு எந்திரனியல் கருவி, கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதாக எம்1 தொலைத்தொடர்பு நிறுவனமும் கெப்பல் லேண்ட் சொத்து நிறுவனமும் தெரிவித்துள்ளன.
கெப்பல் பேயில் இடம்பெறும் இக்கருவிகளும் அவற்றின் தொடர்பிலான இதர அம்சங்களும், வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ள முதல் 5ஜி தொழில்நுட்ப அம்சங்களில் சில. அதோடு, அடிப்படை கைபேசி பயன்பாட்டை மேம்படுத்துவதையும் தாண்டி இப்போது மற்ற செயல்பாடுகளுக்கும் 5ஜி கட்டமைப்பு உபயோகிக்கப்படுகிறது.
எம்1 நிறுவனத்தின் 5ஜி கட்டமைப்பைப் பயன்படுத்தும் எந்திரனியல் கருவி, கெப்பல் பே வளாகத்தை ஊழியர்கள் நேரில் இல்லாமல் கண்காணிக்க உதவும். விருந்தினர்களுக்கு டாக்சிகளை ஏற்பாடு செய்து தருவது போன்ற மற்ற சில செயல்களிலும் அது கைகொடுக்கும்.
அனுமதியில்லாத படகுகள் வந்தால் அவற்றை அடையாளம் கண்டு ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த 5ஜி கண்காணிப்பு கேமரா ஒன்றும் கெப்பல் பேயில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தக் கேமரா, படகுகளையும் கப்பல்களையும் அடையாளம் காணவும் ஆராயவும் தானியக்க முறையைப் பயன்படுத்துகிறது.

