அங் மோ கியோ அவென்யூ மூன்றில் எஸ்பிஎஸ் நிறுவனத்தின் எஸ்பிஎஸ் பேருந்து மோதியதால் 46 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். கவனமின்றி வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்தின் பேரில் பேருந்தின் 56 வயது ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாண்ட பெண் பேருந்தின் பின் சக்கரத்திற்குக் கீழ் சிக்கியிருந்தார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவரை மீட்டனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சம்பவம் குறித்து நேற்று காலை சுமார் ஆறே முக்கால் மணிக்கு தங்களுக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துத் தாங்கள் மிகவும் வருத்தப்படுவதாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து உதவி வழங்கவும் மாண்ட பெண்ணின் உறவினர்கள், அவருக்கு நெருங்கியவர்கள் ஆகியோரைத் தொடர்புகொள்ள முயற்சி எடுத்துவருவதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

