பலருக்குச் சொந்தமான பணத்தைக் தவறாகக் கையாடல் குற்றத்திற்காக சான்றுபெற்ற பொதுக் கணக்காய்வாளர் ஒருவருக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேல் பொதுக் கணக்காய்வாளராக இருந்த 77 வயது ஜெரி லீ கியென் எங், 4.7 மில்லியனுக்கும் அதிகமான தொகையைக் களவாடியிருக்கிறார்.
அவர் களவாடியதில் மாண்ட ஒருவரின் சொத்தும் அடங்கும். களவாடியதில் பெரும்பங்கை லீ பிலிப்பீன்சில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியிருக்கிறார்.
வெளிநாடுகளில் தனக்கிருந்த முதலீட்டுத் திட்டங்களுக்குக் கட்டணம் செலுத்த பிறர் அவரிடம் நம்பி ஒப்படைத்த பணத்தை லீ பயன்படுத்தியிருக்கிறார்.
முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் லீ பல காலமாக ஏமாற்றப்பட்டதாகவும் அவற்றிலிருந்து அவர் எந்தப் பணத்தையும் பெறவில்லை என்றும் மாவட்ட நீதிபதி மார்வின் பே கூறினார்.
லீ சில மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் அவர் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
லீயுடன் ஒரு முறை சேர்ந்து கையாயடலில் ஈடுபட்ட அவரது துணைவியான 74 வயது எலிசன் சீ லே எங்கிற்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரின் களவாடச் செயல்களும் 2016ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளிவந்தன.
மோசடிச் செயல்கள் 2014ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்தப்பட்டன.
பிணையில் விடுவிக்கப்பட்ட இருவருக்கும் வரும் அக்டோபர் மாதம் எட்டாம் தேதியிலிருந்து சிறைத் தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நம்பிக்கை மோசடிக் குற்றம் புரிந்தவருக்கு அதிகபட்சமாக ஏழாண்டுச் சிறைத் தன்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.