சுற்றுச்சூழலின் நீடித்த நிலைத்தன்மையை மேம்படுத்தும் சமூகத் திட்டங்களைச் செயல்படுத்த எண்ணுவோர் மீண்டும் 'எஸ்ஜி இக்கோ' நிதியிலிருந்து உதவி பெறமுடியும்.
இந்த நிதியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரிவின்கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது, அவற்றைப் பரிசீலனை செய்வது இரண்டும் எளிதாகவும் வேகமாகவும் நடக்கும்.
'எஸ்ஜி இக்கோ' நிதிக்கான விண்ணப்பங்கள் நேற்று மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
50 மில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட இந்த நிதித்திட்டத்தை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. சிங்கப்பூரை நீடித்த நிலைத்தன்மைமிக்க நாடாக உருவாக்கும் தீர்வுகளை ஆதரிக்கும் நோக்குடன் நிதி தொடங்கப்பட்டது.
அதற்குப் பின்னர் நவம்பர் மாதம் 25ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நிதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 37 திட்டங்களுக்கு மொத்தமாக 3.7 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டது.
இரண்டாவது முறையாக நிதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ மெய்நிகராக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். 10,000 வெள்ளி வரை நிதியுதவி தேவைப்படும் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை எளிதில் சமர்ப்பிக்க 'ஸ்ப்ரெளட்' எனும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகத் திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.
அதன்படி பரிசீலனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை எழுத்து வடிவில் விளக்குவதற்குப் பதிலாக 'பிட்ச் டெக்' எனப்படும் முறையைக் கொண்டு எளிதில் பரிசீலனைக் குழுவிடம் விவரிக்கலாம். இப்பிரிவின்கீழ் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முறையும் எளிமைப்படுத்தப்படும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிட்டது.
மானியத்திற்கு விண்ணப்பிக்கும் தனிநபர்கள் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளாக இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் குழுக்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி இருக்கவேண்டும். குழுவில் உள்ள அனைவரும் சிங்கப்பூரில் வசித்துக்கொண்டிருக்கவேண்டும்.
'எஸ்ஜி இக்கோ' நிதி, சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030க்கு ஆதரவு தருவதாக அமைச்சு கூறியது.

