வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு தங்களிடம் வேலை செய்யும் நடனமணிகளிடம் சொன்ன இரண்டு கேளிக்கைக் கூட உரிமையாளர்களுக்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
அவர்களில் ஒருவரான 60 வயது ராஜேந்திரன் நாகரத்தினம் மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
மற்றொருவரான 46 வயது அருமைக்கண்ணு சசிகுமார் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
சிங்கப்பூரரான ராஜேந்திரனுக்கு முதலில் 30 மாதச் சிறைத் தண்டனையும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.
அவர் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் சிறைத் தண்டனையை 19 மாதங்களாகக் குறைத்தது, அபராதத் தொகையை 2,500 வெள்ளியாகக் குறைத்தது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான சசிகுமாருக்கு 16 மாதச் சிறைத் தண்டனையும் 11,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.
அவரின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.
'கோலிவுட்' என்ற தங்களின் கேளிக்கைக் கூடத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க இருவரும் பல பெண்களை நடனமணிகளாக வேலைக்கு எடுத்தனர். அவர்களில் பங்ளாதேஷைச் சேர்ந்த இரண்டு பெண்களான குமாரி அக்தர் பித்தி, குமாரி அக்தர் டினா ஆகியோரை வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு ராஜேந்திரனும் சசிகுமாரும் கூறிஇருக்கின்றனர்.
குமாரி பித்தி விருப்பமில்லாமல் இரண்டு வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். அதற்குக் கிடைத்த பணத்தை அவர் சசிகுமாரிடம் தந்தார்.
குமாரி டினா பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்தார். அதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் அவரை அடித்திருக்கிறார்.
பங்ளாதேஷைச் சேர்ந்த ரோக்கி என்ற மற்றோர் ஊழியரின் உதவியுடன் ராஜேந்திரனும் சசிகுமாரும் அப்பெண்களை பாலியல் உறவில் ஈடுபடுமாறு கூறிஇருக்கின்றனர்.
குமாரி பித்தியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது, அதில் வரும் வருமானத்தைப் பயன்படுத்தியது, கைதாவதிலிருந்து தப்பிக்க ரோக்கியை சிங்கப்பூரைவிட்டு வெளியேற ஏற்பாடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ராஜேந்திரனும் சசிகுமாரும் எதிர்நோக்கினர்.

