பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள 'ஜியோ எனர்ஜி' எனும் நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் மீது இரண்டாவது முறையாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 50 வயது சார்ல்ஸ் ஆண்டனி மெலாட்டி மீது ஏற்கெனவே 2006ஆம் ஆண்டில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அதன் தொடர்பிலான விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இல்லை.
முதன்முறையாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம், ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். குற்றத்தை இரண்டாவது முறை புரிந்தது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஈராண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
'ஃபோர்ச்சியூன் கோல் ரிசோர்சஸ்', 'குலோரி புரோஸ் டிரேடிங்', 'எஸ்டிடி கோல் ரிசோர்சஸ்' ஆகிய இதர மூன்று நிறுவனங்களிலும் திரு மெலாட்டி இயக்குநராகப் பதவிவகிப்பதாக கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தரவுத்தளத்தில் உள்ள தகவல்கள் தெரிவித்தன.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான இவர், கடந்த மே மாதம் 15ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சொல்லப்படுகிறது.