மாணவர் சேர்ப்பை நிறுத்தியது 'யேல்-என்யுஎஸ்' கல்லூரி; புதிய கல்லூரி 2022ல் உதயம்

மாணவர் சேர்ப்பை நிறுத்தியது 'யேல்-என்யுஎஸ்' கல்லூரி; புதிய கல்லூரி 2022ல் உதயம்

2 mins read
aa7f547f-36e7-482c-84bb-4e746707c0f1
-

யேல்-என்யுஎஸ் கல்லூரி புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளாது. அந்தக் கல்லூரியில் இந்த மாதத் தொடக்கத்தில் சேர்ந்த 240 மாணவர்களே அதன் கடைசி மாணவர் அணியாக இருப்பார்கள். அவர்கள் 2025ல் பட்டம் பெறுவார்கள்.

யேல் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் (என்யுஎஸ்) சேர்ந்து 2011ல் யேல்-என்யுஎஸ் கல்லூரியை அமைத்தன. அந்தக் கல்லூரி இத்துடன் மொத்தம் ஒன்பது முறை மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு இருக்கிறது.

அந்தக் கல்லூரி, என்யுஎஸ்ஸின் பல்கலைக்கழக கல்விமான் செயல்திட்டத்துடன் (யுஎஸ்பி) இணைக்கப்பட்டு ஒரு புதிய கல்லூரி உதயமாகும். அந்தப் புதிய கல்லூரி அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் திறக்கப்படும் என்று என்யுஎஸ் நேற்று அறிக்கையில் தெரிவித்தது.

யேல்-என்யுஎஸ் கல்லூரி 2024-2025 கல்வி ஆண்டு வரை தொடர்ந்து செயல்படும். அங்கு ஏட்டுக்கல்வி, இணைப்பாடத்திட்ட மற்றும் ஆய்வு செயல்திட்டங்கள் கற்பிக்கப்படும்.

என்யுஎஸ்ஸின் பல்கலைக்கழக கல்விமான் செயல்திட்டத்தில் சேர்ந்து படிப்பவர்கள் அடுத்த ஆண்டு புதிய கல்லூரிக்கு மாற்றப்படுவார்கள்.

இந்தச் செயல்திட்டம் 2001ல் தொடங்கியது. இது ஓராண்டில் என்யுஎஸ்ஸில் உள்ள ஏழு துறைகளையும் பள்ளிகளையும் சேர்ந்த ஏறத்தாழ 240 இளநிலை பட்டக் கல்வி மாணவர்களைச் சேர்த்துக்கொள்கிறது.

யேல்-என்யுஎஸ் கல்லூரி, யுஎஸ்பி கல்விச் செயல்திட்டம் இரண்டின் தலைசிறந்த அம்சங்களையும் பரந்த அனுபவத்தையும் ஒன்றிணைப்பதே இந்த இணைப்பின் நோக்கம் என்று என்யுஎஸ் குறிப்பிட்டு உள்ளது.

புதிய கல்லூரியில் புத்தாக்கத்துடன் கூடிய பொதுவான புதிய பாடத்திட்டம் நடப்பில் இருக்கும். அது அறிவுபூர்வ ஈடுபாட்டையும் துடிப்புமிக்க வசிப்பிட வாழ்க்கை பாணியையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

புதிய கல்லூரிக்காக திட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. என்யுஎஸ்ஸின் மூத்த துணை தலைவர் ஹோ டெக் ஹுவாவை தலைவராகக் கொண்ட அந்தக் குழு, புதிய கல்லூரிக்கான திட்டத்தை தொடர்ந்து உருவாக்கி வரும். யேல்-என்யுஎஸ் மற்றும் யுஎஸ்பி ஆகிய இரண்டின் மாணவர்கள், ஊழியர்கள், துறைத் தலைவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோரின் யோசனைகளையும் கருத்துகளையும் இந்தக் குழு செவிமடுக்கும்.

இதனிடையே, பொறியியல் துறையும் வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பள்ளியும் இணைக்கப்பட்டு வடிவமைப்பு பொறியியல் கல்லூரி உருவாகும் என்றும் என்யுஎஸ் நேற்று அறிவித்தது.