சிங்கப்பூரில் பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் தலைகாட்டிய இரு கொவிட்-19 தொற்றுக் குழுமங் களுடன் தொடர்புடைய கொரோனா கிருமி தொற்றிய 36 பேரில் 34 பேர் பேருந்து ஓட்டுநர்கள்.
அவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் முற்றிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். இந்த விவரங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களில் ஒன்பது பேர் பொங்கோல் நிலையத்தையும் 25 பேர் தோ பாயோ நிலையத்தையும் சேர்ந்தவர்கள் என்றும் அது குறிப்பிட்டது.
இதனிடையே, இந்த இரண்டு சந்திப்பு நிலையங்களிலும் தொற்றுக் குழுமம் தலைகாட்டியதை அடுத்து இவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
தோ பாயோ, பொங்கோல் ஆகிய இரண்டு பேருந்துச் சந்திப்பு நிலையங்களும் கொவிட்-19 தொற்றுக் குழுமங்களாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.
என்றாலும் அந்நிலையங்களில் நேற்று பேருந்துச் சேவைகள் வழக்கம்போல் செயல்பட்டன. ஊழியர்களும் வழக்கம் போல் வேலைக்குச் சென்றனர்.
இதர நாட்களைப் போலவே நேற்றும் எல்லாம் வழக்கம் போல் செயல்பட்டதாக அந்த நிலையங்களில் பேருந்து ஓட்டுநர்களும் துப்புரவு ஊழியர்களும் உணவு, பானக் கடை ஊழியர்களும் பெரும்பாலும் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இருந்தாலும் சிலர் தங்கள் வேலையிடத்தில் கொரோனா தொற்று தலைகாட்டி இருப்பது பற்றி கவலை தெரிவித்தனர்.
தோ பாயோ பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் நேற்று நண்பகலில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்குள்ள உணவகங்களிலும் அதிகம் பேர் காணப்பட்டனர்.
பேருந்து ஓட்டுநர் உட்பட பலரும் உணவை வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நான்கு பேருந்து ஓட்டுநர்களுடன் பேசியது. தாங்கள் அனைவரும் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பதாகவும் 10 நாட்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வதாகவும் ஆகையால் தங்களுக்கு அவ்வளவாக அச்சம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பொங்கோல் பேருந்துச் சந்திப்பு நிலையத்திலும் வழக்க நிலையே காணப்பட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.