சாங்கி விமானநிலைய முனையம் 1, முனையம் 3க்குச் செல்லலாம்
கொள்ளைநோய் காரணமாக மூன்று மாத காலம் மூடி வைக்கப்பட்டிருந்த சாங்கி விமான நிலையம் முனையம் 1 மற்றும் முனையம் 3 ஆகியன செப்டம்பர் 1ஆம் தேதி (புதன்கிழமை) முதல் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளன.
வந்திறங்கும் பயணிகளிடம் இருந்து உள்ளூர் பொதுமக்களைத் தனியாக பிரித்து வைக்கும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடப்பில் உள்ளதைத் தொடர்ந்து இம்முயற்சி எடுக்கப்படுகிறது.
எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட பின்னர் சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு விமான நிலைய வருகைக்கூடங்களில் வருகைப் பயணிகளுக்கும் நிபுணத்துவ சந்திப்புச் சேவைகளை நடத்துவதற்கும் அனுமதி உண்டு. மேலும், இந்த இரு முனையங்களில் உள்ள குளிர்சாதன வசதி களும் வெளிச்சமூட்டும் வசதி களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவதாக, பொதுமக்களுடன் கலப்பதைத் தவிர்க்கும் பொருட்டு விமானநிலைய ஊழியர்களுக்கென தனியாக சாப்பிடும் இடமும் ஓய்வெடுக்கும் பகுதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இரு முனையங்களின் திறப்பு குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமானக் குழுமமும் நேற்று கூட்டாக அறிவித்தன.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கோக் ஜுவான், "முனையங்கள் 1 மற்றும் 3 மறுதிறப்புக்காக சாங்கி விமான நிலையக் குழுமம் செய்திருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எங்களுக்குத் திருப்தி உண்டு," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "நமது எல்லைகளைத் திறக்க சிங்கப்பூர் கவனத்துடன் செயல்பட்டு வரும் வேளையில், சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கும் இங்கிருந்து பயண மாறுதல் மேற்கொள்வோர்க்கும் பாதுகாப்பான இடமாக சாங்கி விமான நிலையம் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை எங்களுக்கு உண்டு.
"விமான நிலையத்தில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு நடைமுறை விதிகளை கொவிட்-19 சூழலுக்கு ஏற்ப மறுஆய்வு செய்வதை ஆணையம் தொடரும்," என்றார்.
அதேநேரம், சாங்கி விமான நிலையம் முனையம் 2ம் முனையம் 4ம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். கொவிட்-19 பரவல் காரணமாக பயணிகள் எண்ணிக்கை சரிந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் முதல் இவ்விரு முனையங்களும் மூடப்பட்டுள்ளன.

