தீவு முழுவதும் ஆகஸ்ட் 16 முதல் நேற்று வரை நடத்தப்பட்ட சோதனையில் போதைப் புழங்கிகள் என சந்தேகிக்கப்படும் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மூன்று கிலோவுக்கும் மேற்பட்ட ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் 544 கிராம் ஐஸ் போதைப்பொருள், 53 கிராம் கஞ்சா, 37 கிராம் கெட்டமைன், 312 எக்டஸி மாத்திரைகள் உள்ளிட்டவையும் இரு வார சோதனையில் சிக்கின. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு $253,000க்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஆக இளையவர் 17 வயது சிங்கப்பூர் பெண் என்றும் அவர் போதைப் புழங்கி என சந்தேகிக்கப்படுவதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று தெரிவித்தது.

