நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ரயில் சேவைகளை நடத்துவதற்கான $1.13 பில்லியன் ஒப்பந்தத்தை சிங்கப்பூரின் கம்ஃபர்ட்டெல்குரோ குழுமம் பெற்றுள்ளது. நியூசிலாந்தின் நிலப் போக்குவரத்துச் சந்தையில் குழுமம் பெற்றிருக்கும் முதல் ஒப்பந்தம் என்பதோடு வெளிநாட்டு ரயில் சேவையில் கால்பதிக்கும் வாய்ப்பையும் கம்ஃபர்ட்டெல்குரோ பெற்றுள்ளது. இதனை இக்குழுமம் நேற்று அறிவித்தது.
பேருந்து மற்றும் டாக்சி சேவைகளை சீனாவிலும் பிரிட்டனிலும் கம்ஃபர்ட்டெல்குரோ ஏற்கெனவே நடத்தி வருகிறது. சிங்கப்பூரில் பேருந்து, ரயில் மற்றும் டாக்சி சேவைகளை நடத்தும் இக்குழுமம் ஆஸ்திரேலிய ரயில் நிறுவனமான 'யுஜிஎல் ரயில் சர்விசஸ்' என்னும் நிறுவனத்துடன் இணைந்து நியூசிலாந்து வாய்ப்பைப் பெற்றுள்ளது. 12 மாத கால ஏலக்குத்தகை நடைமுறை முடிவுற்ற பிறகு இது சாத்தியமானது. கம்ஃபர்ட்டெல்குரோ -யுஜிஎல் ரயில் சர்விசஸ் இரண்டும் இணைந்து 'ஆக்லாந்து ஒன் ரயில்' என்னும் கூட்டு நிறுவனத்தை 50:50 பங்கு விகிதத்தில் ஏற்படுத்தியுள்ளன.
ஆக்லாந்து மெட்ரோ ரயில் சேவையை இப்புதிய நிறுவனம் 2022 ஜனவரி 16 முதல் தொடங்கும். இதற்கான குத்தகைக் காலம் எட்டு ஆண்டுகள். இதனை நீட்டிக்கும் சாத்தியம் உண்டு என கம்ஃபர்ட்டெல்குரோ கூறியது.
ஆக்லாந்து ரயில் கட்டமைப்பு நியூசிலாந்தில் ஆகப் பெரியது. 185 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு ரயில் தடங்களை நிர்வகிக்கிறது. 42 ரயில் நிலையங்களும் 72 மின்சார ரயில்களும் இக்கட்டமைப்பில் அடங்கும். 2024ஆம் ஆண்டு 'சிட்டி ரயில் லிங்க்' என்னும் புதிய ரயில் தடம் ஆக்லாந்தில் தொடங்கப்பட்ட பின்னர், ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 44 ஆகவும் ரயில்
களின் எண்ணிக்கை 95 ஆகவும் உயரும்.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவுமுன் ஆண்டுக்கு 21 மில்லியன் பயணிகளுக்கு இக்கட்டமைப்பு சேவையாற்றியது.

