பொய்யான கட்டணப் பட்டி
யலைத் தயார் செய்ததற்காகவும் $45,000 லஞ்சம் பெற சம்மதித்தற்காகவும் பொதுப் பயனீட்டுக் கழக (பியூபி) முன்னாள் உதவிப் பொறியாளர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
ஜமாலுதீன் முகம்மது எனப்படும் 58 வயது சிங்கப்பூரரான அவர் மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளையும் பொய்க் கணக்கைத் தயார் செய்த இரு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறார்.
'பைப் ஒர்க்ஸ்' என்னும் நிறுவனத்தில் திட்ட மேலாளராக இருந்த சிங்கப்பூரரான கணேசன் சுப்பையா, 51, என்பவரிடம் இருந்து இவர் லஞ்சம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
கணேசன் மீதும் நேற்று ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் பொய்க் கணக்கு தயார் செய்ய உடந்தையாக இருந்த இரு குற்றச்சாட்டுகளும் கணேசன் மீது சுமத்தப்பட்டன. 'பைப் ஒர்க்ஸ்' நிறுவனத்திற்கு கழகத்தின் பணியை வழங்கி அதனை வேகமாக முடிக்க ஜமாலுதீன் லஞ்சம் பெற்றதாகவும் 2017க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் லஞ்சப் பணம் கைமாறியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
ஏலக்குத்தகை பெற தண்ணீர் குழாய் பணிகளைச் செய்யும் வேறொரு நிறுவனத்திடம் 2019 ஜூலை மாதம் ஜமாலுதீன் $500,000 லஞ்சம் வாங்க முயன்றதாகவும் அதே மாதம் மற்றொரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து அதே ஏலக்குத்தகையை ஆதரிக்க லஞ்சம் கேட்டதாகவும் ஆவணங்கள் குறிப்பிட்டன.
இருப்பினும் அவ்விரு நிறுவனங்களும் லஞ்சம் தர மறுத்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள இணங்கு வதாக ஜமாலுதீன் நேற்று நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

