சிங்கப்பூர்-மலேசிய உறவுகள் குறித்து முகைதீனுடன் பிரதமர் லீ உரையாடல்
பிரதமர் லீ சியன் லூங் மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருப்பதாக திரு லீயின் பத்திரிகைச் செயலாளர் சாங் லி லின் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து திரு முகைதீன் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது இருவரும் பேசியதை திருவாட்டி சாங் உறுதிப்படுத்தினார்.
"தொலைபேசி உரையாடலின்போது திரு லீயும் திரு முகைதீனும் இரு நாடுகளுக்கு இடையிலான அணுக்க உறவுகள் பற்றியும் உறுதிமிக்க ஒத்துழைப்பு பற்றியும் விவாதித்தனர். அத்துடன் திரு முகைதீனின் வருங்காலம் வளமாக இருக்க திரு லீ வாழ்த்தினார்," என்று திருவாட்டி சாங் கூறினார்.
முன்னதாக, நல்லதொரு உறவையும் ஒத்துழைப்பையும் இரு நாடுகளும் கொண்டிருப்பது குறித்து திரு லீ பாராட்டு தெரிவித்ததாக திரு முகைதீன் தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இருதரப்பு உறவுகளைத் தொடருவதில் தாம் தொடர்ந்து பங்காற்றுவது குறித்து திரு லீ நம்பிக்கை தெரிவித்ததாகவும் முன்னாள் மலேசிய பிரதமர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திரு லீ, மலேசியாவின் புதிய பிரதமர் திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
தெமாசெக் நிறுவனத்துக்கு இந்தோனீசியாவின் உன்னத விருது
சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதற்காக சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கிற்கு இந்தோனீசியா விருது வழங்கியுள்ளது. இந்த 'உன்னத விருது' வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சிங்கப்பூரிலுள்ள இந்தோனீசியத் தூதரகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. விருதை தெமாசெக் இண்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் தில்ஹன் பிள்ளையிடம் சிங்கப்பூருக்கான இந்தோனீசியத் தூதர் சூர்யோ பிரதோமோ வழங்கிச் சிறப்பித்தார். இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் நிறுவனத்துக்கும் தனிப்பட்டவர்களுக்கும் இந்தோனீசியா ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. நிகழ்வில் பேசிய இந்தோனீசியத் தூதர் சூர்யோ பிரதோமோ, தெமாசெக்கும் அதன் குழு நிறுவனங்களும் இந்தோனீசியாவில் பல்லாண்டு காலமாக தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் வேலைப் பயிற்சி, கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் நன்கொடை வழங்குவது போன்றவற்றில் இந்தோனீசியாவுக்கு தெமாசெக் ஆதரவுக்கரம் நீட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெற்றோர்களுக்கான பயிலரங்கு
சிண்டாவின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பெற்றோர்களுக்கான இலவசப் பயிலரங்கை இணையம் வழி நடத்துகிறது. பெற்றோர்கள் மற்றும் இளையர்களுக்கான
பயிலரங்குகள் நடத்துவதில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுப வம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களாகிய திருமதி ஜகஜித் கோர் மற்றும் திரு மணிவண்ணன் இருவரும் பயிலரங்கை நடத்த விருக்கின்றனர். கேள்வி-பதில் அங்கமும் உண்டு. சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி திரு ரா.அன்பரசு சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொள்ளும் இப்பயிலரங்கில் பங்கேற்பதற்கான ஸூம் அடையாள எண்: 899 4790 5422 நுழைவுக் குறியீடு: JMCSG.

