பல்வேறு குழுக்களிடையே மிதமான அணுகுமுறையை ஊக்குவித்து, எது சரி, எது தவறு என்பதை சமுதாயம் தீர்மானிக்கும் என்பதை கோடிகாட்ட இன நல்லிணக்கம் தொடர்பான புதிய சட்டம் ஒன்றை சிங்கப்பூர் இயற்றவுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்துள்ளார்.
இன நல்லிணக்க பராமரிப்புச் சட்டம் என்ற இந்தப் புதிய சட்டம், இனம் தொடர்பான பிரச்சினை களைக் கையாள்வதற்கான அரசின் அதிகாரங்களை ஒரு சட்டத்தில் உள்ளடக்குகிறது.
இனம் தொடர்பான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதையும் தாண்டி, நல்லிணக்கத்தைத் தூண்டுவது, மறுவாழ்வுப் பயிற்சிகளை அளிப்பது போன்ற மிதமான அணுகுமுறைகளையும் இச்சட்டம் கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக, குற்றம் இழைக்கும் ஒருவர், அக்குற்றத்தை மீண்டும் செய்யாமல் இருக்கவும் அதைச் சரிசெய்யும் விதமாகவும் பாதிக்கப்பட்டவரின் இனம் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளவும் அந்த இனத்தவருடனான உறவுகளை மேம்படுத்தும் விதமாக குற்றம்புரிந்தவரைச் செயல்பட வைக்கவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும்.
இத்தகைய மிதமான அணுகுமுறை பாதிக்கப்பட்டவருக்கு மனக்கசப்பை உண்டுபண்ணாமல், காயத்தை ஆற்றும் என்றார் அவர்.
இதுபோன்ற ஒரு சட்டம்தான் சமய நல்லிணக்கம் பராமரிப்புச் சட்டம். இச்சட்டத்தின் மூலம் இதுவரையில் எவ்விதமான தண்டனையும் வழங்கப்படவில்லை. எனினும், சட்டம் என ஒன்று இருப்பதே நல்ல பயன் தந்துள்ளது. இச்சட்டம் சமய சகிப்பின்மையைக் குறைக்கவும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் உதவியுள்ளது என்று பிரதமர் கூறினார்.
இதேபோல், புதிய இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் மிதமான போக்கை ஊக்குவிப்பதுடன் பல இனத்தவரிடையே சகிப்புத் தன்மையை வளர்க்க உதவும்.
இச்சட்டத்தின் மூலம் சிங்கப்பூர், இன நல்லிணக்கத்துக்கு தலையாய முக்கியத்துவம் தருகிறது என்பது கோடிகாட்டப்படும்.
இனம், சமயம் தொடர்பான நமது கொள்கைகளை நாம் தற்கால நிலைமைக்கு ஏற்றவாறு வகுக்க வேண்டும். ஏனெனில், இன சமய நல்லிணக்கம் என்பது நுட்பமானது, துடிப்பானது என்றார் பிரதமர்.
ஒரு சமுதாயமாக சிங்கப்பூர் கொண்டிருக்கும் பண்புநெறிகளும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் மாறுகின்றன. ஒவ்வொரு தலைமுறையும் இனம் தொடர்பான பிரச்சினைகளில் தனது தனிப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது.
முதிய சிங்கப்பூரர்கள் நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் வாழ்ந்துள்ளனர். இத்தகைய விவகாரங்களைப் பேசுவது சச்சரவை வளர்த்து, வாக்குவாதங்களுக்கு இட்டுச்செல்லலாம் என்பது அவர்களுடைய கருத்து.
இளைய சிங்கப்பூரர்களோ, ஆரம்ப காலங்களில் ஏற்பட்ட இனப் பதற்றமான சூழலையும் கலவரங்களையும் அனுபவித்ததில்லை. நாம் முதிர்ச்சியடைந்துவிட்டோம் நாடு சீராக உள்ளது. தற்போதைய நிலைமையை மேம்படுத்த நாம் விரும்புகிறோம். இதற்காக, இனம், சமயம் தொடர்பான பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசி நமது கொள்கைகளையும் அனுமானங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இளையர்கள் கருதுவதாக திரு லீ கூறினார்.
இதுபோன்ற தலைமுறைகளுக்கிடையே உள்ள மாறுபட்ட கருத்துகள் புரிந்துகொள்ளக்கூடியதே. அவற்றை சிங்கப்பூர் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
உலகம் மாறி வருகிறது. வெளிநாடுகளில் நடைபெறும் சம்பவங்கள் சிங்கப்பூரில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள 'கறுப்பின உயிர்கள் மதிக்கத்தக்கவையே' என்ற இயக்கம், இஸ்ரேலுக்கும் காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான வன்முறை போன்றவை சிங்கப்பூரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
சிங்கப்பூரின் சூழல் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அதுபோல் இவை சிங்கப்பூரர்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளும் அல்ல. எனினும் இவை, சிங்கப்பூர் மக்களைப் பாதிக்கின்றன. இதனால், அவ்வப்போது இனம், சமயம் தொடர்பான சிங்கப்பூரின் கொள்கைகளை, சிங்கப்பூரின் தேவைகளுக்கு ஏற்ப சரிசெய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் பிரதமர் லீ.

