கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் இனங்களுக்கிடையிலான பதற்றம் தலை தூக்கியதை நினைவுபடுத்திய பிரதமர் லீ சியன் லூங், தமது உரையில் இனம், சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். பெரிதும் பேசப்பட்ட அண்மைய இனவாத சம்பவங்களைச் சுட்டிய அவர், பல சம்பவங்கள் இந்தியர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதைக் குறிப்பிட்டார்.
அதற்கு இரு காரணங்கள் இருக்கலாம் என்றார் அவர். ஒன்று சிங்கப்பூரில் வேலை அனுமதியில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை.
இரண்டாவது, இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய ‘டெல்டா வேரியன்ட்’ எனப்படும் உருமாறிய கொவிட்-19 கிருமி. ஆனால் இதில் பழியை இந்தியர் மீது சுமத்துவது ஏற்புடையதல்ல.
இதனால் ஏற்படக்கூடிய விரக்தி மனப்பான்மை இன நல்லிணக்கத்தைப் பாதிக்கவிடக்கூடாது என்று வலியுறுத்தினார் பிரதமர்.
வேலை அனுமதி எண்ணிக்கையை முறைப்படுத்துவதுடன், நாடு விட்டு நாடு வருவோரிடையே சுகாதார பாதுகாப்பு பரிசோதனையை மேம்படுத்துவது போன்ற உண்மையான பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும் என்றார் அவர்.