சிங்கப்பூரின் இன நல்லிணக்கம் மிகவும் மென்மையானது என்று அண்மைய இனவாதச் சம்பவங்கள் நினைவுபடுத்தியுள்ளன. எனினும் அவற்றால் இன நல்லிணக்கம் குறித்த நாட்டின் அணுகுமுறை தவறாகிவிடாது என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்றைய தேசிய தினக் கூட்ட உரையில் கூறினார்.
கடும் உழைப்பு, தியாகம், விவேகம் ஆகிவற்றைக் கொண்டு குடியரசு இன நல்லிணக்கத்தை உருவாக்கியது என்ற திரு லீ, விட்டுக் கொடுப்பதன்வழி வெவ்வேறு இனச் சமூகங்கள் சமநிலையை எட்டியுள்ளதாகக் கூறினார்.
இது அரிதான, அருமையான சாதனை என்றபோதும் இச்சமநிலை நுட்பமானது என்றார் அவர்.
நாடுகளின் வரலாற்றில் 56 ஆண்டுகள் மிகவும் குறுகிய காலம் என்ற அவர், சிங்கப்பூரின் இன நல்லிணக்கப் பணி நீண்டகாலத்துக்கு செய்யவேண்டியது என்று கூறினார்.
இனவாதச் செயல்களை உறுதி யுடன் கண்டித்து, வேறொரு போர்வையில் இனரீதியான குழப்பம் வேண்டுமென்றே தூண்டப்படுவதை எதிர்த்துப் பேசும் தார்மீகத் துணிவு சிங்கப்பூரர்களுக்கு இருக்க வேண்டும் என்றார் பிரதமர் லீ.

