அதிகமான வேலை அனுமதிச் சீட்டு ஊழியர்கள் இருக்கும் வேலையிடப் பிரச்சினைகளை அதிகாரிகள் சமாளிக்கும் அதே வேளையில் அவர்களது சமூகத் தாக்கத்திலும் கவனம் செலுத்தவேண்டும் என்றார் பிரதமர் லீ.
வேலை அனுமதி அட்டையில் வேலை செய்வோர் சீனராகவோ மலாய்க்காரராகவோ இந்தியராகவோ இருந்தாலும்கூட அவர்கள் கலாசார ரீதியாக சிங்கப்பூரர்களைவிட வேறுபட்டுள்ளனர் என்றார் அவர்.
''சொல்லப்போனால் அவர்கள் இனரீதியாக நம்மைப்போல் இருப்பதால்தான் சில சமயம் சச்சரவுகள் எழுகின்றன. அவர்கள் பார்ப்பதற்கு நம்மைப் போல இருக்கிறார்கள் ஆனால் நம்மைப் போன்று நடந்து கொள்வதில்லை,'' என்றார் பிரதமர். இது புரிந்துகொள்வதற்குச் சிரமம்தான் என்றும் அதற்கு தாம் ஒரு வெளிநாட்டுத் தலைவருடன் சிங்கப்பூரின் பல இன சமூகத்தைப் பற்றி விளக்க முற்பட்ட அனுபவத்தை திரு லீ பகிர்ந்துகொண்டார்.
இரு தலைமுறைகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் இந்தியர்கள் இந்தியாவின் இந்தியர்களைவிடவும் சிங்கப்பூர் சீனர்கள் சீனாவின் சீனர்களைவிடவும் மாறுபட்டு இருக்கிறார்கள் என்பதை அந்த வெளிநாட்டுத் தலைவரிடம் விளக்கியதாகவும் அவருக்கு ஆங்கிலம் புரிந்திருந்தாலும் தாம் சொன்னவற்றை அவரால் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்றே தாம் அப்போது உணர்ந்ததாகவும் திரு லீ கூறினார்.
வெளிநாட்டுக் குடியேற்ற வேர்களைக் கொண்ட சிங்கப்பூர் பொதுவாக சமத்துவமான சமூகம் என்றும் பல ஆண்டுகள் இங்கு வசித்த பிறகு சில வெளிநாட்டவர் இங்கு குடும்பங்களை அமைத்துள்ளதாகவும் அவர்கள் 'சிங்கிலிஷ்' பேசி உள்ளூர் உணவு
களையும் ரசித்து உண்கிறார்கள் என்றும் பிரதமர் சுட்டினார்.
''ஆனால் வேலை அனுமதிச் சீட்டில் உள்ள சிலரும் அவர்களது குடும்பங்களும் அவர்களது சமூகப் பழக்கவழக்கங்களையும் அவர் களின் நாட்டிலுள்ள வர்க்க பேதங் களையும் இங்கு கொண்டுவருகிறார்கள். இது சிங்கப்பூரர்கள் ஒருவருக்கு ஒருவர் சமமாக, பாகுபாடின்றி பழகுவதற்கு எதிர்மறையானது. இதனால் சச்சரவுகள் ஏற்படுகின்றன. இங்கு சமூகத்துடன் ஒன்றிணைய சிங்கப்பூர் எப்படிப்பட்டது என சிங்கப்பூரர் அல்லாதவர் புரிந்து நடந்துகொள்ளவேண்டும்,'' என்றார் திரு லீ.

